அக்டோபரில் 150 கி.மீ பாதயாத்திரை போக வேண்டும்.. பாஜக எம்பி-க்களுக்கு மோடி அதிரடி உத்தரவு
டெல்லி: மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக எம்பிகள் 150 கிமீ பாதயாத்திரை மேற்கொள்ள மோடி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் பின்வருமாறு: சமீபத்தில் பாஜக எம்பி-களுக்கு பிரதமர் மோடி பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதில் முக்கியமாக பாஜக மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி-க்கள் அனைவரும் காந்தி மற்றும் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு, தத்தம் தொகுதிகளில் பாதயாத்திரை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
அக்டோபர் 2 முதல் 31-ம் தேதிக்குள் பாஜக எம்பி-க்கள் அனைவரும் தங்களது தொகுதியில், குறைந்தபட்சம் 150 கிமீ தொலைவுக்கு பாதயாத்திரை செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த பாதயாத்திரையானது பாஜக பலவீனமாக உள்ள பகுதிகளில் நடத்தப்பட வேண்டும். எங்கெல்லாம் பாஜக பலவீனமாக உள்ளதோ, அங்கெல்லாம் சென்று கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என பிரதமா் வலியுறுத்தியுள்ளார். பாத யாத்திரையின் போது மக்களிடம் நெருங்கி அவர்கள் மத்திய அரசிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், அவர்களது பரிந்துரைகளை உள்வாங்கி கொள்ளுமாறும் எம்பி-க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி 150 கிமீ பாதயாத்திரை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. எம்பி-க்களின் இந்த பாதயாத்திரை நிகழ்ச்சியின் போது, மகாத்மா காந்தி குறித்து நிகழ்ச்சிகள், சுதந்திர போராட்ட வரலாறு மற்றும் அவரது கொள்கைகள் பற்றி எடுத்துரைக்க வேண்டும்.
இந்த பாதயாத்திரையின் நோக்கம் கிராமங்களுக்கு புத்துயிரூட்டுதல்,சுயசார்புள்ள கிராமங்களை உருவாக்குதல், மரக்கன்று நடுதல் என தகவல் பாஜக வட்டாரங்கள் கூறியுள்ளன. மேலும் தேர்தல் அறிக்கையில் பாஜக சார்பில் என்னவெல்லாம் தெரிவிக்கப்பட்டதோ, அவை அனைத்தும் நம்முடைய செயல்பாடுகள் மற்றும் திட்டங்களில் தென்பட வேண்டும் என எம்பிக்களுக்கு பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
மிக முக்கியமாக காந்திய எண்ணங்களை எம்பி-க்கள் மக்களுடன் விவாதிக்க வேண்டும் என்றும், மோடி அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.