இன்று நாடாளுமன்றம் கூடுகிறது.. ஜனாதிபதி உரை புறக்கணிப்பு.. திமுக, காங். உட்பட 16 கட்சிகள் அதிரடி!
டெல்லி: 3 விவசாய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையாற்றும்போது அதை, திமுக, காங்கிரஸ் உட்பட 16 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று 29ம் தேதி வெள்ளிக்கிழமை துவங்குகிறது. பிப்ரவரி 1ம் தேதி இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன்பாக முறைப்படி இந்த கூட்டம் தொடங்கும்.
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவது மரபு. இதன்படி காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். ஆனால் இந்த உரையை காங்கிரஸ் உட்பட 16 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மூன்று விவசாய சட்டங்களை எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் இல்லாமல் தாங்களாகவே ஆளும் அரசு நிறைவேற்றிக் கொண்டது. இதற்கு கண்டனத்தை பதிவு செய்யும் வகையில், நாங்கள் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க உள்ளோம், என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
72-வது குடியரசு தினம்:டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றினார்- கண்கவர் அணிவகுப்பு
எந்தெந்த கட்சிகள்?:
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, மக்கள் குடியரசு கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், கேரளா காங்கிரஸ் மற்றும் அனைத்திந்திய ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் குடியரசு தலைவர் உரையை புறக்கணிக்க உள்ள கட்சிகளாகும்.