இன்று நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது.. எம்பியாக பதவியேற்றார் மோடி!
டெல்லி: டெல்லியில் இன்று நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அப்போது வாரணாசி தொகுதியின் எம்பியாக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்கெனவே பிரதமராக இருந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. இதையடுத்து, புதிய 17-வது மக்களவைக்கான முதல் கூட்டத்தொடர், இன்று தொடங்கியது.
முதல் இரண்டு நாட்களுக்கு புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அவர்களுக்கு இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. எம்.பி. வீரேந்திரகுமார், பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். முன்னதாக வீரேந்திரகுமாருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
வரும் 19-ஆம் தேதி, சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும். 20-ஆம் தேதி, இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். ஜூலை 5-ஆம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
ஜூலை 26- ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்தலாக் தடை உள்பட 10 அவசர சட்டங்களை மசோதாக்களாக நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, இந்த முதல் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தவிரும்பிய மத்திய அரசு நேற்றைய தினம் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது.