17வது மக்களவை.. மொத்த வேட்பாளர்களில் 5ல் ஒருவர் மீது கிரிமினல் வழக்கு.. மிரள வைக்கும் டேட்டா
டெல்லி: 17 வது மக்களவைக்கு போட்டியிட்டு மக்களின் மான்புமிகுக்களாக வரவிருப்பவர்களில் 48% பேர் பட்டதாரிகளாகவும் ஐந்தில் ஒருவர் மீது குற்றவியல் வழக்கும் இருப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.
17 மக்களவையை அமைப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்ட தேர்தலில் 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது மீதமுள்ள ஒரு கட்ட தேர்தல் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. அதனையடுத்து மே 23 ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு தேர்வானவர்கள் மக்களின் மான்புமிகுக்களாக நாடாளுமன்றம் செல்வர்.
இப்படி மாண்பு மிகு மனிதர்களாக போட்டியிடுவோர் குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. வேட்பாளர்களின் சொத்து, கல்வி மற்றும் குற்ற வழக்குப் பின்னணி தொடர்பான விவரங்களை இந்த அமைப்பு ஆய்வுக்காக எடுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு நடப்பதற்கு முன்பும், இறுதி வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
அட..! வேட்பாளர்களில் இத்தனை பேர் 'கோடீஸ்வரிகளா'?
குற்றவியல் பின்னணி
இவ்வாறாக கடந்த ஆறு கட்ட தேர்தலின்போதும் இறுதிகட்ட வேட்பாளர்களின் சொத்து, கல்வி மற்றும் குற்ற வழக்குப் பின்னணி தொடர்பான விவரங்களை இந்த அமைப்பு வெளியிட்டு இருந்தது. இதனையடுத்து இப்போது இறுதி கட்ட தேர்தல் வரும் 19 - ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 7 வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து, கல்வி மற்றும் குற்ற வழக்குப் பின்னணி தொடர்பான விவரங்களையும் இந்த அமைப்பு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.
பட்டதாரிகள்
அதன்படி ஒட்டுமொத்த வேட்பாளர்களில் 48 விழுக்காட்டினர் பட்டதாரிகளாக உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கல்வித் தகுதி வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் சூழலில் கட்சிகளே இது போன்று கற்றோருக்கு வாய்ப்பளிப்பது சற்று ஆறுதலான விஷயம். ஆனால் இந்த ஆய்வில் தெரிவிக்கப்படும் பிற விவரங்களை பார்க்கும்போது நம்மை ஆள்வோர் இப்படிப்பட்டவர்களா என்று பார்க்கும்போது அச்ச உணர்வே மேலோங்குகிறது.
குற்ற வழக்குகள்
ஜனநாயக சீர்திருத்த சங்கம் மேற்கொண்ட ஆய்வின்படி, 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஒட்டுமொத்த வேட்பாளர்களில் 19% மீது குற்ற வழக்குகள் உள்ளன. இது கடந்த இரு தேர்தல்களை ஒப்பிடும்போது அதிகரித்துக்கொண்டே வந்துள்ளதை காண முடிகிறது. 2009ஆம் ஆண்டு தேர்தலில் 15% ஆக இருந்த குற்ற வழக்கு உள்ளவர்களின் சதவிகிதம் 2014ஆம் ஆண்டு தேர்தலில் 17% விழுக்காடாக அதிகரித்துள்ளது. அது இந்த தேர்தலில் மேலும் 2% அதிகரித்து 19% ஆக உள்ளது.
அதிகரிக்கும் கொடுமை
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இச்சங்கத்தின் நிறுவன உறுப்பினர் ஜெக்தீப் சோகர் குற்றப் பின்னணி உடையவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருவது குறித்து சிந்திக்க வேண்டும். இது அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, வாக்காளர்கள் என அனைவருமே இது குறித்து சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.
பாரபட்சமே இல்லை
குற்றப்பின்னணி உடையவர்கள் அனைத்துக் கட்சிகளிலும் உள்ளனர். ஆளும்கட்சியான பாஜகவின் வேட்பாளர்களில் 40 விழுக்காட்டினர் மீதும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்களில் 39 விழுக்காட்டினர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. இது தவிர இன்னும் சில அரசியல் கட்சிகளில் உள்ள வேட்பாளர்களில் 50% அதிகமானோர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.
பெண் வேட்பாளர்கள் குறைவு
குற்றப் பின்னணி தவிர பிற பிற அம்சங்களை கணக்கெடுத்ததில் 60 விழுக்காட்டினர் 50 வயதுக்கும் குறைவானவர்கள். 9 விழுக்காட்டினர் மட்டுமே பெண்கள் என்று தெரிய வந்துள்ளது. .