உத்தர பிரதேசத்தில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக வந்து மோதிய லாரி.. 18 பேர் பலி
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பராபங்கி பகுதியில் வேகமாக சென்ற லாரி, நின்று கொண்டிருந்த பஸ் மீது மோதியதில் 18 பேர் பலியாகியுள்ளனர். 19 பேர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை 1:30 மணியளவில் பராபங்கி பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 18 பயணிகள் இறந்த நிலையில், மேலும் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
லக்னோ-அயோத்தி தேசிய நெடுஞ்சாலையில், ராம் சானேஹி காட் காவல் நிலைய பகுதிக்கு அருகே, தாபாவில் பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த பஸ்ஸில் 140 பேர் இருந்துள்ளனர். அதில் பலரும் பஸ் நிறுத்தப்பட்டதும் கீழே இறங்கி சாலையோரத்தில் படுத்து இருந்துள்ளனர். அப்போது வேகமாக வந்த லாரி நின்று கொண்டிருந்த பஸ் மீது மோதியது.
இதனால் சம்பவ இடத்திலேயே 18 பேர் கொல்லப்பட்டனர். பஸ்சுக்கு அருகே படுத்திருந்தவர்கள் மீது லாரி மற்றும் பஸ் டயர்கள் ஏறியுள்ளன. தகவல் அறிந்ததும் விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இறந்தவர்கள் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனக் கூறப்படுகிறது. ஹரியானாவின் பல்வாலில் இருந்து பீகார் மாநிலத்திற்கு அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். இந்த விபத்தில் 19க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.