இந்தியாவில் அதீத உச்சம் - 24 மணிநேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா- 380 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதீத உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 19,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 1 கோடியை தாண்டிவிட்டது. இதுவரை மொத்தம் 1,02,48,232 பேர் கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 5,04,462 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்னொருபக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 55,56,439 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
ஒரு முறை இரு முறையல்ல.. 80 முறை துவைத்து பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்கள்.. கோவையில் அசத்தல்
உலக அளவில் முதல் 3 நாடுகள்
உலக நாடுகளில் அமெரிக்காதான் கொரோனாவால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவை தொடர்ந்து மிக மோசமாக பிரேசில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து 3-வது இடத்தில் ரஷ்யாவும் 4-வது இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன. பிரேசிலில் தொடரும் கொரோனா அதிகரிப்பானது அந்த நாட்டை முதலிடத்துக்கு விரைவில் கொண்டு போய்விடும் நிலையை உருவாக்கி இருக்கிறது.
இந்தியாவில் 19,459 பேருக்கு பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மொத்தம் 19,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,48,318 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 24 மணிநேரத்தில் 380 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 16,475 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லியில் பாதிப்பு
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம்தான் மிக அதிக அளவில் பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் 1,64,626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இம்மாநிலத்தில் 7,429 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர். மகாராஷ்டிராவை தொடர்ந்து டெல்லியில் 83,077 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். டெல்லியில் மட்டும் 2,623 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழக நிலவரம்
கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,500ஐ தாண்டியதாக இருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் 82,275 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இருப்பினும் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 1079 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.