அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் க்ளைமாக்ஸ்- செப்.30ல் லக்னோ கோர்ட் தீர்ப்பு!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகன் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30-ந் தேதி உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. இதனையடுத்து அத்வானி உள்ளிட்ட 32 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இந்திய ஜனநாயகத்தை உலுக்கி எடுத்த நாள்.. மதச்சார்பின்மையின் அடையாளமாக இருந்த உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி பாபர் மசூதியை இந்துத்துவா ஆதரவாளர்கள் இடித்து தரை மட்டமாக்கினர்.
செப்.30ம் தேதிக்குள் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு- புது காலக்கெடு நிர்ணயித்த உச்சநீதிமன்றம்
நாடு முழுவதும் வன்முறைகள்
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் கோரத் தாண்டவமாடின. இதன் உச்சமாக 1993-ம் ஆண்டு உலகையே உலுக்கிய பல நூறு உயிர்களை பலி கொண்ட மும்பை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. பின்னாளில் பல்லாயிரம் உயிர்களை காவு வாங்கிய குஜராத் வன்முறை சம்பவங்களுக்கும் இந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவமே அடிப்படையாக அமைந்தது.
அத்வானி உள்ளிட்டோர் மீது வழக்கு
பாபர் மசூதியை இடித்ததாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் மீதான கிரிமினல் வழக்கை லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் (எஸ்கே யாதவ்) விசாரித்து வந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி ஓய்வு பெற வேண்டியது இருந்தது.
அவகாசம் தந்த சுப்ரீம் கோர்ட்
இருப்பினும் இந்த வழக்கை கண்காணித்து வந்த உச்சநீதிமன்றம், நீதிபதி யாதவே, பாபர் மசூதி இடிப்பு வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம் என அனுமதி அளித்தது. இதனால் உத்தரப்பிரதேச மாநில அரசு, நீதிபதி யாதவுக்கு பணி நீட்டிப்பு வழங்கியது. அப்போது 9 மாதங்களுக்குள் பாபர் மசூதி இடிப்பு வழக்கை முடிக்க வேண்டும் என்கிற ஒரு காலக் கெடுவையும் உச்சநீதிமன்றம் விதித்திருந்தது. ஆனால் கடந்த மே மாதம், கொரோனா பரவல்- லாக்டவுன் காரணமாக விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார் நீதிபதி யாதவ்.
அத்வானி உள்ளிட்டோர் வாக்குமூலம்
இதனடிப்படையில் ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் பாபர் மசூதி வழக்கை முடித்து வைக்க உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியது. பின்னர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் பெற்றார் நீதிபதி. இந்த வாக்குமூலத்தின் போது, தங்களுக்கும் பாபர் மசூதி இடிப்புக்கும் தொடர்பு இல்லை என பாஜக தலைவர்கள் அனைவரும் மறுத்தனர். இதையடுத்து வழக்கின் இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து மேலும் கால அவகாசம் கோரினார் நீதிபதி யாதவ். இதனை ஏற்று செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வழக்கை முடிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்தது.
செப்.30-ந் தேதி தீர்ப்பு
இந்த நிலையில்தான் வரும் 30-ந் தேதி அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்குகிறார் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி யாதவ். இதற்காக அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 28 ஆண்டு கால வழக்கில் வரும் 30-ந் தேதி க்ளைமாக்ஸாக தீர்ப்பு வழங்கப்பட இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாபர் மசூதி- குற்றம்சாட்டப்பட்டவர்கள்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விவரம்: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுதிர் கக்கார், சதீஷ் பிரதான், ராம் சந்திர கத்ரி, சந்தோஷ் துபே, ஓம் பிரகாஷ் பாண்டே, கல்யாண்சிங், உமாபாரதி, ராம்விலாஸ் வேதாந்தி, வினய் கட்டியார், பிரகாஷ் ஷர்னா, காந்தி யாதவ், ஜெய்பான் சிங், லல்லுசிங், கம்லேஷ் திரிபாதி, பிரிஜ் பூஷண் சிங், ராம்ஜி குப்தா, மகந்த் நிருத்ய கோபால் தாஸ், சம்பத் ராய், சாக்ஷி மகாராஜ், வினய் குமார் ராய், நவீன் பாய் சுக்லா, தர்மதாஸ், ஜெய் பகவான் கோயல், அமர்நாத் கோயல், சாத்வி ரிதம்பரா, பவான் பாண்டே, விஜய் பகதுர் சிங், ஶ்ரீவத்ஸ்வா,, தர்மேந்திர சிங் குஜ்ஜார்,