கோவாக்சின் தடுப்பூசி விநியோகம் தொடக்கம்... முதல் பேட்ஜ் தடுப்பூசி டெல்லி வந்தடைந்தது
டெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் பேட்ஜ் ஹைதராபாத்தில் இருந்து தற்போது டெல்லி வந்தடைந்தது.
இந்தியாவில் வரும் ஜனவரி 16ஆம் தேதி முதல் பொதுமக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளது. இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இரு நிறுவனங்களிடம் இருந்தும் வரும் சனிக்கிழமைக்குள் சுமார் 1.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி விநியோகம் நேற்று அதிகாலை தொடங்கியது. புனேவிலுள்ள சீரம் நிறுவனத்தின் ஆய்வகத்தில் இருந்து தடுப்பூசி விநியோகம் தொடங்கியது.
இந்நிலையில், தற்போது கோவாக்சின் தடுப்பூசி விநியோகமும் தொடங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து முதல் பேட்ஜ் கொரோனா தடுப்பூசி இருந்து இன்று காலை டெல்லி வந்தடைந்தது.
இன்னும் சில நாட்களில் சீரம் நிறுவனத்திடம் இருந்து 1.1 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் 55 லட்சம் டோஸ்களுக்கும் மத்திய அரசிடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.