நாடு முழுவதும் தீயாய் பரவும் கொரோனா - ஒரே நாளில் 2,34,692 பேர் பாதிப்பு - 1341 பேர் மரணம்
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1341 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 3 நாட்களாகவே 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மேலும் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 1,341 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர். உலக அளவில் ஒருநாள் கொரோனா தொற்று பரவலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை:
கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் புதிதாக 2,34,692 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,45,26,609 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் 1,23,354 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.
நேற்று ஒரே நாளில்1,341 பேர் பலியாகினர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,75,649 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,26,71,220 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 16,79,740 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 11,99,37,641 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் தான் கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிகமாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் புதிதாக 63,729 பேருக்கும், டெல்லியில் 19,486 பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதியாகியுள்ளது.
டெல்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதமும், இரண்டாவது முறையாகவும் முகக்கவசம் அணியாமல் விதியை மீறுபவர்களுக்கு ரூ.10000 அபராதமும் விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் தீயாக பரவும் கொரோனா - 14 கோடி பேர் பாதிப்பு - 30 லட்சம் பேர் மரணம்
11 மாநிலங்களில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையில், சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
நாட்டில் மூன்றாவது நாளாக 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். வட இந்தியாவில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைகளில் இடமின்றியும், மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.