எங்கே செல்லும் இந்த பாதை.. இந்தியாவில் இன்று 2,61,500 பேருக்கு கொரோனா..உயிரிழப்பும் புதிய உச்சம்!
டெல்லி: இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 2,50,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினசரி உயிரிழப்பும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர்
4வது நாளாக தொடர்ந்து 2 லட்சத்தை தாண்டிய கொரோனா தினசரி பாதிப்பு.. இந்தியாவில் ஜெட் வேகத்தில் வைரஸ்!
அசைந்து கொடுக்காத கொரோனா
நாடு முழுவதும் கொரோனா மீண்டும் தனது அசுர பலத்தை காட்டி வருகிறது. கடந்த சில வாரங்களில் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்த கொரோனா தற்போது தினசரி பாதிப்பில் 2,50,000-க்கும் மேல் சென்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்து வந்தாலும் கொரோனா அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை.
தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு என்னும் ஆயுதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளன. மகாராஷ்டிராவில் 15 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு மாநிலங்கள் வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்பதை அமல்படுத்திவிட்டன. ஆனால் பொது மக்கள் மாஸ்க் உள்ளிட்ட வழிமுறைகளை மறந்ததே கொரோனா மீண்டும் அதிகரிப்பதற்கு காரணம் என்றும் இதனை முழுமையாக பின்பற்றாவிட்டால் கொரோனாவை ஒழிக்க முடியாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
2,61,500 பேருக்கு புதிதாக தொற்று
இந்த நிலையில் இந்தியாவில் வழக்கம்போல் கொரோன ஜாலியாக ஆட்டம் போட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும்1,38,423 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,88,109 ஆக இருக்கிறது. கொரோனாவில் இருந்து மொத்தம் 1,28,09,643 பேர் குணமடைந்துள்ளனர். தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் 1,77,150 ஆக உயர்ந்துள்ளது.
புதிய உச்சம்
கொரோனாவுக்கு நாடு முழுவதும் 18,01,316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன. இதுவரை இந்தியாவில் 12,26,22,590 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 2,50,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினசரி உயிரிழப்பும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் தினசரி குணமடைபவர்களை விட தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.