டெல்லியில் திருப்பம்.. ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 2 பேர் தகுதி நீக்கம்.. சபாநாயகர் அதிரடி நடவடிக்கை!
டெல்லி: டெல்லியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் இரண்டு பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கர்நாடகாவில் கடந்த மாதம்தான் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் ஆட்சி கவிழ்ந்தது. அங்கு 17 எம்எல்ஏக்களை சபாநாயகர் இதனால் தகுதி நீக்கம் செய்தார்.
இந்த நிலையில் தற்போது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் இரண்டு பேர் டெல்லியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். கட்சி தாவல் தடை சட்டத்தின்படி இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்கள் அணில் பாஜ்பாய் மற்றும் தேவேந்திர ஷெராவத் ஆகியோர் தகுதி நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அங்கு ஆம் ஆத்மி எம்எல்ஏ கபில் மிஸ்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இவர்கள் மூன்று பேரும் இடைத்தேர்தலில் நிற்க முடியாது என்று சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் அறிவித்துள்ளார்.
இவர்கள் மூன்று பேரும் இந்த வருட தொடக்கத்தில் பாஜக கட்சிக்கு மாறுவதாக அறிவித்தனர். பாஜகவில் சேர்வதாக இவர்கள் கூறியதை அடுத்து கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கபில் மிஸ்ரா ஏற்கனவே சபாநாயகர் முடிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளில் 67ல் வென்று ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. இப்போது ஆம் ஆத்மியின் பலம் 64 ஆக குறைந்துள்ளது. அவையின் பலம் 67 ஆக குறைந்துள்ளது.