யார் தீவிரவாதி? வேளாண் சட்டத்தை எதிர்க்கும் ஆர்எஸ்எஸ் மோகன்பகவத்தும் தீவிரவாதியா? ராகுல் கொதிப்பு
நாடு முழுவதிலும் இருந்து, வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 2 கோடி பேரிடம் காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து பெற்று உள்ளனர்.
டெல்லி: வேளாண்சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை தீவிரவாதிகளாக முத்திரை குத்துகின்றனர். பிரதமர் மோடியை எதிர்ப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் எனில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார் அவரையும் தீவிரவாதி என்பீர்களா? என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல்காந்தி.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்த ராகுல்காந்தி வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்துக்கள் அடங்கிய மனுவை அளித்தார். கடும்குளிரில் 29 நாட்களாக போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை குடியரசுத்தலைவர் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் ராகுல்காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 29 நாட்களாக டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கையெழுத்து
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒருபுறம் போராடி வரும் நிலையில், இந்த சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதிலும் இருந்து, வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 2 கோடி பேரிடம் அந்த கட்சியினர் கையெழுத்து பெற்று உள்ளனர்.
குடியரசுத்தலைவரிடம் மனு
2 கோடி கையெழுத்துக்கள் அடங்கிய கோரிக்கை மனுவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று குலாம் ஆசாத்துடன் சென்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து வழங்கினார்.
விவசாயிகள் போராட்டம்
குடியரசுத்தலைவரிடம் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, "விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளுக்கு முன் எந்த சக்தியாலும் நிற்க முடியாது. அவர்களுக்கு எதிரான சட்டங்களும் நிற்க முடியாது என்றார். நாட்டில் அனைத்து தரப்பிலும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
விவசாயிகள் தீவிரவாதிகளா?
இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. அரசுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் வசதி படைத்தவர்கள் அல்ல. நீங்கள் யாரை தீவிரவாதி என அழைக்கிறீர்களோ, அவர்கள்தான் நாட்டிற்கு வளம் சேர்ப்பவர்கள் என்று கூறினார்.
மோகன்பகவத் யார்?
பிரதமர் மோடியை எதிர்ப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தப்படுகின்றனர். அப்படி எனில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் கூறியுள்ளார் அவரையும் தீவிரவாதி என்பீர்களா? என்று ஆவேசத்துடன் கேட்டார். தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி தனது நண்பர்களான முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கிறார். அவருக்கு எதிராக நிற்பவர்களை பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். அப்படி எனில் விவசாயிகள் மட்டுமல்ல ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் கூட தீவிரவாதியா என்று கேள்வி எழுப்பினார்.
ஆபத்தான நிலையில் நாடு
தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, கடந்த ஒரு மாத காலமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். நாடு ஆபத்தான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. ஜனநாயகம் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. மொத்த அரசும் வெறும் மூன்று, நான்கு பேருக்காக மட்டுமே இயங்கி வருகிறது. இந்தியாவில் ஜனநாயகம் இல்லை. உங்களில் சிலர் இருப்பதாக நினைத்தால், அது உங்கள் கற்பனை என்றும் சாடினார் ராகுல்காந்தி.