டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக 2 விவசாய சங்கங்கள் அறிவிப்பு!
டெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றிருந்த அகில இந்திய கிசான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்பு குழு போராட்டத்தில் இருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
நாங்கள் மக்களை அடிக்க இங்கு வரவில்லை என்று அந்த சங்கத்தின் தலைவர் சர்தார் வி.எம்.சிங் கூறினார்.
இதேபோல் போராட்டத்தில் பங்கேற்றிருந்த பாரதிய கிஷான் யூனியன் (பானு) என்ற விவசாய சங்கமும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளது.
டிராக்டர் பேரணி
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் சமூக விரோதிகள் புகுந்தனர். இதனால் போராட்டம் திசை மாறியது. சிலர் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
வாபஸ் பெறுகிறோம்
போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாய சங்க கொடிகள் ஏற்றப்பட்டன. டெல்லி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த போராட்டத்துக்கு அரசியல்வாதிகள்தான் காரணம் என்று சில விவசாய அமைப்புகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றிருந்த அகில இந்திய கிசான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்பு குழு போராட்டத்தில் இருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் சர்தார் வி.எம். சிங் கூறியதாவது:-
மக்களை அடிக்க வரவில்லை
டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் இருந்து வாபஸ் பெறுகிறோம். ஆனால் எங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை(எம்எஸ்பி) உத்தரவாதம் கிடைக்கும் வரை போராடுவோம். ஆனால் டெல்லியில் இந்த வடிவத்தில் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். ஏனெனில் நாங்கள் மக்களை கொல்வதற்கோ அல்லது அடிக்கவோ இங்கு வரவில்லை. விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் அவர்கள் தலைமையில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வேறு யாரோ தவறான வழிநடத்துதலுடன் நடைபெறும் ஒரு போராட்டத்தை நாங்கள் தொடர முடியாது. போராடி கொண்டிருப்பவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வி.எம். சிங் கூறினார்.
பாரதிய கிஷான் யூனியன் அறிவிப்பு
இதேபோல் போராட்டத்தில் பங்கேற்றிருந்த பாரதிய கிஷான் யூனியன் (பானு) என்ற விவசாய சங்கமும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளது. பாரதிய கிஷான் யூனியன் (பானு) பிரிவு டெல்லி சில்லா எல்லையில் போராட்டத்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.