தலைமை நீதிபதிக்கு எதிரான 'சதி' பின்னணியில், அனில் அம்பானிக்கு 'ஹெல்ப்' செய்த இருவர்! பரபர தகவல்
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்த பின்னணியில், அனில் அம்பானிக்கு உதவிகரமாக இருந்த 2 முன்னாள் ஊழியர்கள் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் பாலியல் புகார் கூறியதன் பின்னணியில் பெரும் சதி நடந்திருப்பதாகவும், நீதியை விலைக்கு வாங்க நினைப்போர் இதன் பின்னணியில் இருப்பதாகவும், சண்டீகரை சேர்ந்த வழக்கறிஞர் உற்சவ் சிங் பயின்ஸ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக பிரமாண பத்திரங்களை அவர், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் தாக்கல் செய்தார்.
மதுரையில் மறுதேர்தல் நடத்துக... உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு
அனில் அம்பானி
அந்த பிரமாணப் பத்திரத்தில், தபன் சக்ரபோர்த்தி மற்றும் மானவ் ஷர்மா ஆகிய முன்னாள் உச்சநீதிமன்ற ஊழியர்களின் பெயர்கள் சதிகாரர்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ரிலையன்ஸ் கம்யுனிகேஷன்ஸ் தலைவர் அனில் அம்பானி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், வேண்டுமென்றே குழப்பம் செய்ததற்காக இவர்கள் இருவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டவர்களாகும்.
வெப்சைட்டில் கோல்மால்
எரிக்சன் நிறுவனத்திற்கு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரூ.550 கோடி பாக்கி வைத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாரிமன், வினீத் சரண் ஆகியோர் அமர்வு, அனில் அம்பானி, உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், சுப்ரீம் கோர்ட் வெப்சைட்டில், இந்த உத்தரவை தபன் மற்றும் மானவ் மாற்றியமைத்துவிட்டனர். 3 நாட்கள் பிறகே, அந்த தவறு சரி செய்யப்பட்டது.
சதி
இதையடுத்து, ஏமாற்று, மோசடி ஆகிய புகார்களில் பின்னர், ஏப்ரல் 8ம் தேதி, இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர். சக்ரபோர்த்தி, உதவி ரிஜிஸ்டர் பதவியிலும், மானவ் ஷர்மா, கோர்ட் மாஸ்டர் பதவியும் வகித்து வந்தனர். சுப்ரீம் கோர்ட் வெப்சைட்டில், அனில் அம்பானி வழக்கில் மாற்றுத் தகவல்களை இடம்பெறச் செய்த இவர்களின் பின்னணியில் பெரும் சதி இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், 8 நாட்கள் போலீஸ் காவலில் வைத்தும் விசாரிக்கப்பட்டனர். தற்போது, அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளனர்.
ஜாமீன் மறுப்பு
இருவருமே ஜாமீன் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில், மனுத்தாக்கல் செய்தும்கூட, அவர்கள் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இது முக்கியமான விவகாரம் என்பதால், ஜாமீன் தர முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது. இவ்விருவரும் ரஞ்சன் கோகாய் மீதான புகாரின் பின்னணியில் இருப்பதாக அந்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.