டெல்லி சிஏஏ வன்முறை.. போலீஸ்காரர் உள்பட 3 பேர் பலி.. களம் இறங்கியது கூடுதல் போலீஸ் படை!
டெல்லி: டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் போராடி வருபவர்களுக்கு இடையே நடந்த மோதலில் போலீஸ்காரர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். துணை போலீஸ் கமிஷ்னர் உள்பட பல போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.
டெல்லியில் இன்று மௌஜ்பூர் மற்றும் ஜாஃபராபாத் ஆகிய இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். இதேபோல் அங்கு குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவும் ஒரு தரப்பு மக்கள் போராடி வருகிறார்கள்.
இரு தரப்பும் பயங்கரமாக மோதிக்கொண்டதில் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இதில் தலைமைக்காவலர் ரத்தன் லால் போராட்டக்கார்கள் தாக்கியதால் தலையில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
டெல்லி துணை போலீஸ் கமிஷ்னர் ஷாத்ரா, அமித் சர்மா உள்ளிட்ட பல போலீஸ் அதிகாரிகள் இந்த வன்முறையில் காயம் அடைந்தனர். இந்த மோதலில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்துவிட்டார்.
இந்த மோதலில் காயம் அடைந்த போராட்டக்கார்களின் எணிக்கை குறித்து சரியான தகவல்கள் இன்னமும் தெரியவரவில்லை.
டெல்லியின் மௌஜ்பூர் மற்றும் ஜாஃபராபாத் பகுதிகளில் போராட்டக்கார்கள் பல வீடுகளையும் வாகனங்களையும் எரித்ததால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. சந்த் பாக் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலிருந்தும் வன்முறை வெடித்தது.
இந்நிலையில் வன்முறை பரவிய இடங்களுக்கு கூடுதல் போலீசாரை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. வன்முறை ஏற்பட்ட இடங்களில் எல்லாம் தற்போதும் கட்டுக்குள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் டெல்லியில் உள்ள நிலையில் போராட்டம் வன்முறையாக மாறி இருவர் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.