இப்ப ஒரு காரணம்! நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் 2 பேர் டெல்லி நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல்
டெல்லி: மரண தண்டனை விதிக்கப்பட்ட நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேரில் இரண்டு பேர் டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள்.
2012 டிசம்பரில் நிர்பயா என்று மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவி சில நாளில் சிங்கப்பூரில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
கொலைகார கொரானா வைரஸ்.. இதுதாங்க அறிகுறி.. உடனே நீங்க செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
2013ல் தீர்ப்பு
இவர்களில் ராம்சிங், டெல்லி திகார் சிறையில் 2013 ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். 2013 ம் ஆண்டு செப்டம்பரில் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த டெல்லி நீதிமன்றம் 18 வயது நிரம்பாத சிறுவன் என்பதால் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அதேநேரம் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றம்
தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கனை டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா குற்றம் நடந்த 2012ல் தனக்கு 18 வயது ஆகவில்லை என்று வழக்கு தொடர்ந்ததுடன் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரினார். இந்த மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நிராகரிப்பு
இதற்கிடையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுபபிவிட்டு தண்டனையை நிறுத்திவைக்க கோரினார். ஆனால் இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணை மனுவை நிராகரித்தார். இதையடுத்து அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும் 4 பேருக்கும் பிப்ரவரி 1 ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி செசன்ஸ் நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்தது.முன்னதாக ஜனவரி 22ம் தேதி தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருந்நதது.
காலதாமதம்
இந்நிலையில், அக்சய் குமார் சிங் (31), பவன் குமார் சிங் (25) ஆகிய இரு குற்றவாளிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய உள்ளார்கள். இதற்காக சில முக்கிய ஆவணங்களை திகார் சிறை அதிகாரிகளிடம் கோரியிருக்கிறார்கள். ஆனால், அந்த ஆவணங்களைத் தருவதில் திகார் சிறை அதிகாரிகள் தொடர்ந்து தாமதம் செய்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், தங்களுக்கு தேவைப்படும் ஆவணங்களை விரைவாக வழங்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.
தாமதம் செய்கிறார்கள்
இந்த மனு டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் நாளை (சனிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வரும் பிப்ரவரி 1 ம் தேதி குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில் தண்டனையை தள்ளிப்போட புதிது புதிதாக மனுக்களை குற்றவாளிகள் தாக்கல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.