நல்ல செய்தி.. மத்திய அரசுக்கு 50% விலையில் ஜன-பிப்ரவரியில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம்! ,
டெல்லி: இந்தியாவுக்கு கொரோனாவை எதிர்ககொள்ள ஆக்ஸ்போர்டு தடுப்பூசி ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி துவக்கத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட கொரோனாவுக்க எதிரான போரில் முன்வரிசை வீரர்களுக்கு கிடைக்கும்.
இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜென்கா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த ஒப்புதல்கிடைத்த உடன், இந்தியாவும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு ஒப்புதல் தர உள்ளது. அதன்பிறகு மருநது கிடைக்கும்.
சீரம் நிறுவனம் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிகோரி இனிமேல் தான் விண்ணப்பிக்க வேண்டும். அனேகமாக டிசம்பரில் விண்ணப்பிக்கும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவை கலங்க வைத்த கொரோனா.. ஒரே நாளில் 134,237 பேருக்கு தொற்று உறுதி
இரண்டு ஷாட் தடுப்பூசி
தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் எவ்வளவு மருந்துகளை வாங்குவது என்பது தொடர்பான ஒப்பந்தத்தை மத்திய அரசு இறுதி செய்து வருகிறது. மொத்தமாக கொள்முதல் செய்யும் அரசாங்கம், குறைந்த விலைக்கு தர வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இரண்டு ஷாட் தடுப்பூசி விலை ரூ .500-600 என்ற அளவில் இருக்க வேண்டும் என விரும்புகிறது. அதாவது நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையில் கிட்டத்தட்ட பாதியாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவாக்சின் எப்போது
முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளின் தரவை சமர்ப்பித்த பின்னர் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் அவசர ஒப்புதலுக்காக பரிசீலிக்கப்படலாம்.. இந்தியாவில் தற்போது 3 ஆம் கட்ட சோதனைகளில் இருக்கும் தடுப்பூசிக்கான தரவை பாரத் பயோடெக் வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஒழுங்குமுறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே, பிப்ரவரி மாதத்திற்குள் இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவிற்கு கிடைக்கக்கூடும்.
சீரம் தயாரிக்கும்
தடுப்பூசி மற்றும் மருந்து ஒழுங்குமுறை அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில். "எல்லாமே திட்டத்தின் படி நடந்தால், சீரம் நிறுவனம் டிசம்பரில் அவசர அங்கீகாரத்தைப் பெறலாம். அதனைத்தொடர்ந்து ஜனவரி-பிப்ரவரி மாதங்களுக்குள் முதல் தடுப்பூசிகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். முதலில் தடுப்பூசி கொடுக்க வேண்டிய பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.
மருந்து கிடைக்கும்
கொரோனாவை கட்டுப்படுத்த மருத்து அளிக்கப்பட வேண்டியவர்கள் என நான்கு வெவ்வேறு குழுக்களாக மக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 25-30 கோடி பேருக்க முன்னுரிமை கொடுக்கும் பட்சத்தில் 50-60 கோடி டோஸ்கள் தேவைப்படும். இதில் ஆரம்பத்தில் வரையறுக்கப்பட்ட டோஸ் அளவுகள் ஜனவரி இறுதிக்குள் எதிர்பார்க்கப்படுகின்றன, 70 லட்சம் சுகாதார பணியாளர்கள் மற்றும் போலீஸ், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உட்பட 2 கோடி பேருக்கு தரப்பட உள்ளது.