மண்ணில் புதைந்த மலைகிராமம்.. 20 உடல்கள் மீட்பு.. 40 பேரை தேடும் மீட்பு குழு.. சோகத்தில் கவலப்பாறா!
டெல்லி: கேரள மாநிலம், கவலப்பாறாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 60க்கும் மேற்பட்டோர் சிக்கிய நிலையில் இதுவரை 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 40 பேரை தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. இதனால் வடமாநிலங்கள், தென்மாநிலங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன. கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், குஜராத், ஒடிஸா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்படுகிறது. இந்த கனமழையால் அணைகள், ஆறுகள் நிரம்பி காணப்படுகின்றன. ஆறுகளில் பெரு வெள்ளப்பெருக்கால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கவலப்பாறா
இந்த நிலையில் வயநாட்டில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில் கவலப்பாறா என்ற மலை கிராமம் உள்ளது.
மலையிலிருந்த மண்
இங்கு 10 ஏக்கர் பரப்பளவில் 35 குடும்பத்தினர் வசித்து வந்தனர். கடந்த 8-ஆம் தேதி கனமழை பெய்து வந்ததால் மலையிலிருந்த மண் சரிந்தது. அப்போது மலப்புரத்தில் உள்ள கவலுப்பாறா கிராமம் கடந்த 8-ஆம் தேதி பெய்த பெருமழையில் மண்ணில் புதையுண்டது.
கண்ணீருடன் தேடும் உறவினர்கள்
தொடர்ந்து 3 நாட்களாக பெய்து வரும் மழையிலும் மண்ணுக்குள் புதையுண்டவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலச்சரிவில் 60 பேர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள் தங்கள் உறவினர்களை கண்ணீருடன் தேடி வந்தனர்.
பரபரப்பு
இந்த நிலையில் மழை சற்று குறைந்திருந்த நிலையில் ஜேசிபி கொண்டு இடிபாடுகள் அகற்றப்பட்டன. அப்போது அங்கிருந்து 20 உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் 40 பேரின் நிலை என்னவென தெரியவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.