கங்கையை முழுவதும் சுத்தமாக்கி பேணி காப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.. ரத்தன் லால் கட்டாரியா
டெல்லி: கங்கை நதியை சுத்தமாக. தூய்மையாக, மாசின்றி பேணி காக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக, மத்திய நீர்சக்தி துறை இணையமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா கூறியுள்ளாா்.
கழிவுநீர், குப்பை போன்றவற்றால் மாசடைந்துள்ள கங்கை நதியை சுத்தப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கங்கையை தூய்மைப்படுத்துவதற்காக மத்திய அரசு தேசிய திட்ட அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு மாசுகளால் அசுத்தமடைந்துள்ள கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக நமாமி கங்கை என்ற திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2014 ம் ஆண்டு ஜுன் மாதம் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ரேவதி ராமன் சிங், கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
கோவையை உலுக்கிய முஸ்கின் பலாத்கார கொலை.. மனோகரனுக்கு தூக்கு உறுதி.. சுப்ரீம் கோர்ட் அதிரடி
மேலும் நாட்டிலுள்ள நதிகளின் நிலை குறித்து கவலை தெரிவித்தார். பனிப்பாறைகள் விரைவாக உருகி வருவதாகவும் குறிப்பிட்டார். அதே போல கங்கையை காப்பாற்ற அணைகள் கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று அவர் கோரினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கட்டாரியா கடந்த 5 ஆண்டுகளில் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்காக, மத்திய அரசு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்கும், புனரமைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முந்தைய திட்டங்களை மறுசீரமைப்பு செய்வது உட்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரத்தன் லால் கட்டாரியா தெரிவித்தார்.
உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கங்கையில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.