ஒன்றல்ல.. இரண்டல்ல.. 20 லட்சம் இவிஎம்களை காணவில்லை.. தொடரும் புதிர்.. முடிவிற்கு வராத கேள்விகள்!
20 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காணாமல் போய் இருப்பதாக பரபரப்பு புகார் வைக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
டெல்லி: 20 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காணாமல் போய் இருப்பதாக பரபரப்பு புகார் வைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த இரண்டு வருடமாக இந்த எந்திரங்கள் எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.
லோக்சபா தேர்தல் கடைசியில் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிந்துள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணையம் மாற்றுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நிறைய அதிர வைக்கும் உண்மைகள் வெளியாகி உள்ளது.
இவிஎம் ஸ்வாப்பிங் நடக்கிறது.. எதிர்க்கட்சிகளின் அதிர வைக்கும் புகார்.. உண்மையில் நடப்பது என்ன?
எப்படி வாங்கும்
பொதுவாக இந்திய தேர்தல் ஆணையம் இரண்டு நிறுவனங்களிடம் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாங்குகிறது. ஹைதராபாத்தில் இருக்கும் இசிஐஎல் மற்றும் பெங்களூரில் உள்ள பிஇஎல் நிறுவனம் இரண்டில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணையம் வாங்குகிறது. 1990ல் இருந்து இப்படி வாங்கப்படுகிறது.
எவ்வளவு எந்திரங்களை வாங்கியது
இந்த நிலையில், 1990-2015 வரை வாங்கப்பட்ட எந்திரங்கள் 20.20 லட்சம் மட்டுமே. இசிஐஎல் நிறுவனத்திடம் இருந்து 10,05,662, பிஇஎல் நிறுவனத்திடம் இருந்து 10,14,644 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளது, மனோரஞ்சன் ராய் என்ற மும்பையை சேர்ந்த நபர் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் என்ன
ஆனால் இதே கேள்விக்கு இசிஐஎல் மற்றும் பிஇஎல் நிறுவனம் இரண்டு வேறு மாதிரி பதில் அளித்துள்ளது, அதன்படி இசிஐஎல் நிறுவனம் 19 லட்சம் மற்றும் பிஇஎல் நிறுவனம் 20 லட்சம் மின்னணு வாக்குபதிவு எந்திரங்களை விற்பனை செய்ததாக கூறியுள்ளது. அதாவது மொத்தம் 40 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் விற்கப்பட்டு உள்ளது.
வழக்கு நடக்கிறது
மீதமுள்ள 20 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எங்கே போனது என்ற கதை யாருக்கும் தெரியவில்லை, இந்த எந்திரங்கள் எங்கே இருக்கிறது. யார் இதை வைத்து இருக்கிறார்கள் என்று விவரம் இன்னும் புதிராக உள்ளது. இது தொடர்பாக சென்ற வருடம் வழக்கு தொடுக்கப்பட்டு அதன் மீதான விசாரணை நடந்து வருகிறது.
சர்ச்சை எழுந்துள்ளது
இந்த 20 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்தான் தற்போது கொண்டு வரப்பட்டு இருக்கிறதா, இதை வைத்துதான் முறைகேடு நடக்கிறதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளது. ஆனால் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை சரியான விளக்கம் அளிக்கவில்லை. இந்த 20 லட்சம் எந்திரங்கள் எங்கே போனது என்பதே தற்போது புரியாத புதிராக இருக்கிறது.