இந்தியாவில் புதிய வகை கொரோனா? பிரிட்டனில் இருந்து திரும்பியவர்களில் 20 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்!
டெல்லி: பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவி வரும் நிலையில், அந்நாட்டில் இருந்து இந்தியா திரும்பிய 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன் பிரிட்டனில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது. இந்தப் புதிய வகை, மற்ற கொரோனா வைரஸ்களைவிட 70% வேகமாகப் பரவுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மற்ற நாடுகளுக்குப் பரவும் புதிய வகை கொரோனா
இந்தப் புதிய வகை கொரோனா ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் சிலவற்றில் கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதால் மற்ற நாடுகளுக்கும் இந்த புதிய வகை கொரோனா விரைவில் பரவும் என்று அச்சம் நிலவுகிறது.
பிரிட்டனில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா
சென்னை, டெல்லி, கொல்கத்தா ஆகிய விமான நிலையங்களில் பிரிட்டனில் இருந்து திரும்பிய 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடந்த 10 நாள்களில் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து திரும்பிய பயணிகள் குறித்த விவரங்களை மாநில அரசுகள் சேகரிக்கத் தொடங்கியுள்ளன.
தமிழ்நாட்டிற்கு திரும்பிய ஒருவருக்கு கொரோனா
பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 24 பேரில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், "கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவருடன் நெருக்கமான தொடர்பிலிருந்த 15 பேரையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்" என்றார்.
பயணிகள் தகவல் சேகரிப்பு
கடந்த ஏழு நாட்களில் பிரிட்டனிலிருந்து வந்த 1,088 பயணிகளின் உடல்நலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. கடந்த நவம்பர் 25க்குப் பிறகு தமிழகம் திரும்பிய அனைத்து சர்வதேச பயணிகள் குறித்த தகவல்களையும் சேகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாபில் நால்வருக்கு கொரோனா
ஏர் இந்தியா விமானம் மூலம் இங்கிலாந்திலிருந்து வந்த ஏழு பயணிகளுக்கும் ஒரு விமான ஊழியருக்கும் பஞ்சாபில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில மருத்துவ கல்வித் துறை அமைச்சர் ஓ.பி. சோனி தெரிவித்தார்.
மற்ற மாநிலங்களில் நிலைமை எப்படி?
பிரிட்டனிலிருந்து திரும்பியவர்களில் கொல்கத்தாவில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல டெல்லியில் ஆறு பேருக்கும், அகமதாபாத்தில் நான்கு பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய வகை கொரோனாவா?
தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேவிலுள்ள தேசிய கிருமியியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களில் யாரேனும் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்த ஆய்வு அங்கு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வின் முடிவுகள் இன்னும் சில நாள்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவியிருக்கலாம்
பிரிட்டனில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் இந்தப் புதிய வகை கொரோனா குறித்த தகவல் வெளியானது. இந்தப் புதிய வகை வைரஸ் மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பிரிட்டனுடனான விமானச் சேவையை நேற்று முதல் இந்தியா தற்காலிகமாக ரத்து செய்தது. இருப்பினும், இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியா திரும்பியவர்களில் யாரேனும் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சென்னை மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கை
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 2,000 பயணிகள் பிரிட்டனிலிருந்து சென்னை திரும்பியுள்ளனர். அவர்களில் யாராவது ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டாலும், அவர்கள் வசிக்கும் தெருவில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அவர்களில் மாதிரிகள் புனேவில் இருக்கும் தேசிய கிருமியியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல தெலங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் பிரிட்டனிலிருந்து திரும்பியவர்களைத் தீவிரமாகக் கண்காணித்துவருகிறது.