2 மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி வீரர்கள்.. இந்தியா இழப்பீடு கோரலாம்.. சர்வதேச தீர்ப்பாயம் அதிரடி!
டெல்லி: கேரளா மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படை வீரர்களுக்கு எதிரான வழக்கில் உயிரிழந்தவர்களுக்காக இந்தியா இழப்பீடு கோரலாம் என்று சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களை இந்திய நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்று சர்வதேச தீர்ப்பாயம் கூறியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த இரண்டு மீனவர்களை இந்திய கடற்பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு இத்தாலி கடற்படை வீரர்கள் இரண்டு பேர் சுட்டுக்கொன்றனர். என்ரிகா லெக்சி என்ற இத்தாலி நாட்டு சரக்குக் கப்பலில் இருந்த சால்வாட்டர் கிரோன் மற்றும் மாசிமிலியானோ லாட்டோர் என்ற இரண்டு கடற்படை வீரர்கள்தான் இந்த குற்றத்தை செய்தது.
கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஜெலஸ்டைன், அஜீஸ் பிங்கு இருவரும் இதில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் இந்திய கடல் எல்லையில் நடந்தது என்று இந்தியா குற்றஞ்சாட்டியது.
அதே சமயம் இந்த சம்பவம் இந்திய கடல் எல்லைக்கு வெளியே நடத்ததாக இத்தாலி கூறியது. இந்த வழக்கில் சால்வாட்டர் கிரோன் மற்றும் மாசிமிலியானோ இருவரும் இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதில் மாசிமிலியானோ உடல் நலக்குறைவு காரணமாக இத்தாலிக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அதன்பின் ஐநா அழுத்தம் காரணமாக 2016ல் சால்வாட்டர் விடுதலை செய்யப்பட்டார்.
சீனா கிளப்பும் பீதி.. ரஷ்ய அதிபர் புடினுக்கு போனை போட்ட பிரதமர் மோடி.. என்ன பேசினார்கள்.. பரபரப்பு!
இவர்களை முறையாக கைது செய்யவும் இந்தியாவில் விசாரிக்கவும் இந்தியா சர்வதேச தீர்த்தபாயத்தில் முறையிட்டது. இதில் கொல்லப்பட்டவர்கள் இரண்டு பேரும் இந்தியர்கள். அதனால் குற்றம் செய்தவர்களை இந்திய கோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என்று இந்தியா முறையிட்டது.
அதேபோல் இந்த சம்பவம் இந்திய நீர் பகுதியில் நடந்ததாக இந்தியா முறையிட்டது. ஆனால் இதை இத்தாலி எதிர்த்தது. இந்த சம்பவம் சர்வதேச கடல் எல்லையில் நடந்தது என்று இத்தாலி கூறியது. இந்த வழக்கு மீதான விசாரணை சர்வதேச தீர்ப்பாயத்தில் நடந்து முடிந்துள்ளது. இதன் விசாரணை முடிந்த நிலையில் தற்போது சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பளித்து உள்ளது.
அதன்படி கேரளா மீனவர்களை சுட்டுக்கொண்ட இத்தாலி கடற்படை வீரர்களுக்கு எதிரான வழக்கில் உயிரிழந்தவர்களுக்காக இந்தியா இழப்பீடு கோரலாம் என்று சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியா தனது மீனவர்களை இழந்துள்ளது என்பதால் அதற்கு இத்தாலியிடம் இந்தியா இழப்பீடு கோரலாம் என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது .
ஆனால் சர்வதேச ஐநா சட்டப்படி இந்தியா இத்தாலி வீரர்களை இந்திய நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது, அவர்களை கைது செய்ய முடியாது என்று சர்வதேச தீர்ப்பாயம் கூறியுள்ளது. இவர்களை கைது செய்து இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயன்றது. ஆனாலும் இந்த வழக்கில் இந்த தீர்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.