தியாகம்தான் வழி.. எதிர்க்கட்சி மாநாட்டில் ரகசிய க்ளூ.. மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்?
நேற்று கொல்கத்தாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் மாநாட்டில், யார் பிரதமர் வேட்பாளர் ஆவார் என்பது குறித்த சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: நேற்று கொல்கத்தாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் மாநாட்டில், யார் எதிர்கட்சிக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ஆவார் என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பெரிய மாநாட்டை நேற்று நடத்தினார். இதற்கு ஐக்கிய இந்தியா மாநாடு என்று பெயர் வைக்கப்பட்டது.
பாஜக கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல இதில் ஒன்று சேர்ந்து இதில் கலந்து கொண்டது. இந்த மாநாடு பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.
ஒரே கேள்வி
ஆனால் இந்த பெரிய மாநாட்டில் ஒரே கேள்விதான் இருந்தது. இந்த எதிர்கட்சிக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக யார் இருப்பார் என்ற கேள்விதான் எழுந்தது. இந்த கூட்டணியில் 20 முக்கிய தலைவர்கள் இருக்கிறார்கள். அதில் 10 பேர் வரை பிரதமர் வேட்பாளர் ஆவதற்கு தகுதி படைத்தவர்கள் என்றுதான் கூற வேண்டும். இவர்களில் யார் பிரதமர் வேட்பாளர் ஆவார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
யார் யார்
முக்கியமாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இதில் போட்டியில் இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய அணியில், யார் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
ரகசிய க்ளூ
இந்த மாநாட்டில் பேசிய சில தலைவர்கள், இதுகுறித்து மக்களுக்கு க்ளூ ஒன்றும் கொடுத்து இருக்கிறார்கள். அதன்படி இதில் பேசிய முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, ''நாம் சில தியாகங்களை செய்துதான் கூட்டணி அமைக்க வேண்டும்'' என்றார். அதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ''நாம் இந்த கூட்டணிக்காக எதையும் இழக்க தயாராக இருக்க வேண்டும்'' என்றார். அகிலேஷ் யாதவ் ''உத்தர பிரதேசத்தில் இருந்துதான் பிரதமர் வர வேண்டும் என்று நான் எப்போதும் பிடிவாதமாக நினைத்துதான் இல்லை'' என்று கூறினார்.
மேலும் சில தகவல்
அபிஷேக் மனு சிங்வி, யஷ்வந்த் சின்கா உள்ளிட்ட பல தலைவர்கள் இதே கருத்தைதான் கூறினார்கள். மாயாவதி, தேர்தலுக்கு பின் அறிவிப்போம் என்பது போல பேசினார். இதை வைத்து அரசியல் விமர்சகர்கள் எல்லோரும், ''எதிர்க்கட்சி கூட்டணி தனக்கான பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்ய தயாராகிவிட்டது'' என்று கூறி உள்ளனர். எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள பல தலைவர்கள், ''தியாகம் செய்ய தயாராகி இருக்கிறார்கள்'' என்று கூறி உள்ளனர்.
வாய்ப்புள்ளது
இதற்கு முன் எதிர்கட்சிகளிடம் இந்த ஒற்றுமை இல்லை. ஆனால் இப்போது தியாகம் செய்ய தயாராகி உள்ளனர். இதனால் விரைவில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வாய்ப்புள்ளது. முக்கிய சில தலைவர்கள் கூட தியாகத்திற்கு தயாராகிவிட்டதால் பெரிய அளவில் பிரச்சனையின்றி பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.