2024 லோக்சபா தேர்தலை முன்வைத்து கச்சத்தீவு சிக்கலுக்கு தீர்வு- ஜரூர் முயற்சியில் மத்திய பாஜக அரசு?
டெல்லி: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் கணிசமான வாக்குகளை அறுவடை செய்யும் யுக்தியாக கச்சத்தீவு பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக படுதீவிரமாக இறங்கி இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. இதனையடுத்து இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இலங்கையின் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை போக்கவும் இந்தியா உதவி வருகிறது.
இந்தியா தொடர்ச்சியாக இப்படி இலங்கைக்கு உதவி வருவது தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதாவது சீனா பாணியில் இலங்கைக்கு அதிகமான கடன்களை வழங்கி இலங்கையின் துறைமுகங்கள் மீதான கட்டுப்பாட்டை இந்தியா எடுத்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்து போகும் நிலையில் இந்திய ரூபாயை இலங்கையின் வர்த்தகத்தில் பயன்படுத்தும் நிலைமை உருவாக்கப்படலாம் என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
கச்சத்தீவு ஆலயத்துக்கு செல்ல தமிழர்களுக்கு இலவச விசா தர இலங்கையிடம் வலியுறுத்தினோம்:அண்ணாமலை
கச்சத்தீவும் இந்தியாவும்
அதேநேரத்தில் இலங்கையின் நெருக்கடியை பயன்படுத்தி இந்திய அரசு, கச்சத்தீவு விவகாரத்தில் புதிய நகர்வுகளை மேற்கொள்ளக் கூடும்; அதாவது கச்சத்தீவை நீண்டகால குத்தகைக்கு இந்தியா பெறக் கூடிய சாத்தியம் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. இதற்கான சாத்தியங்களை உறுதி செய்யும் வகையில் 1,500 ஏக்கர் பரப்பளவிலான உச்சமுனி தீவை சுவிஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு கொடுத்திருக்கிறது இலங்கை. இது சாத்தியமாகும் போது இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட கச்சத்தீவை இந்தியாவிடமே 99 ஆண்டு குத்தகைக்கு கொடுப்பது சாத்தியம்தான் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
அண்ணாமலை இலங்கை பயணம்
இந்த பின்னணியில் அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றிருந்தார். இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்கள், பூர்வ குடிகளான ஈழத் தமிழர் பகுதிகளுக்கு அண்ணாமலை சென்றார். அப்பகுதிகளின் அரசியல் தலைவர்களை அண்ணாமலை சந்தித்தார். அதேபோல் ஈழத் தமிழ் மீனவர்களுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தி இருந்தார். இதன் பின்னர் தமிழகம் திரும்பிய அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்புகளில் அதிகமாக குறிப்பிட்டது, கச்சத்தீவு விவகாரத்தைத்தான்.
கச்சத்தீவு 6-வது சரத்து
கச்சத்தீவு விவகாரம் பற்றி அண்ணாமலை பேசும்போது தவறாமல் குறிப்பிட்டது கச்சத்தீவு ஒப்பந்தத்தின் 6-வது சரத்து பற்றிதான். 1974-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவை தமிழ்நாடு அரசிடம் கலந்தாலோசிக்காமல் இந்திய மத்திய அரசு இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தது. 1920ம் ஆண்டு முதலே கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கையே இடையேயான சர்ச்சை தொடர்ந்து இருந்து வந்தது. இதன் ஒரு கட்டமாகவே 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார். அப்போது கச்சத்தீவு மீதான தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனை உறுதி செய்யக் கூடிய வகையில்தான் 6-வது சரத்து இருந்தது. அதாவது தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில்- அதாவது இலங்கையின் நெடுந்தீவு வரை மீன்பிடிக்கலாம் என்பதை உறுதி செய்தது அந்த சரத்து. ஆனால் 1976-ம் ஆண்டு இச்சரத்தை இலங்கை அரசு ரத்து செய்துவிட்டது. இந்திய மத்திய அரசும் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை. அதேநேரத்தில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது; கச்சத்தீவை மீட்க கோரி தமிழகம் வழக்கும் தொடர்ந்திருக்கிறது.
கச்சத்தீவு பிரச்சனைக்கு தீர்வு?
இந்நிலையில் கச்சத்தீவு பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ரத்து செய்யப்பட்ட 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் 6-வது சரத்தை மீள அமல்படுத்துமாறு இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. கச்சத்தீவு விவகாரத்தில் இதுவரை எந்த ஒரு அரசும் ஒரு அடி கூட முன்நகர்வை மேற்கொண்டதே இல்லை.அப்படியான சூழ்நிலையில் மத்திய பாஜக அரசின் இந்த முயற்சி மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக மிக மிக கடுமையாக போராடுகிறது காலூன்றுவதற்கு.. ஆனால் அத்தனை திசைகளிலும் பாஜகவுக்கு கடுமையான எதிர்ப்புதான் தொடருகிறது. இந்த இறுக்கத்தை தகர்க்கக் கூடிய ஒரே ஆயுதமாக கச்சத்தீவு விவகாரத்தை பாஜக நம்புகிறது. அதுவும் 2024 லோக்சபா தேர்தலுக்குள் கச்சத்தீவு பிரச்சனையில் ஒரு தீர்வை உருவாக்கிவிட்டால் தமிழகத்தில் பாஜக கணிசமான வாக்குகளையும் இடங்களையும் பெறக் கூடிய சூழ்நிலை உருவாகும் என கணக்குப் போடுகிறது டெல்லி. ஆகையால் கச்சத்தீவு பிரச்சனையில் இனி வரும் நாட்கள் பரபரப்பான திருப்பங்களாக இருக்கக் கூடும் என்பதில் சந்தேகமே இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.