அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தாக்கலானது முதல் சீராய்வு மனு.. ஜமியத் உலமா அமைப்பு வழக்கு
டெல்லி: அயோத்தி வழக்கில் முதல் சீராய்வு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜமியத் உலமா-இ-ஹிந்த் அயோத்தி குறித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அயோத்தி வழக்கில் கடந்த நவம்பர் 9ம் தேதி இறுதி தீர்ப்பு வெளியானது. சர்ச்சைக்குரிய, நிலம் இந்து தரப்புக்கு சொந்தமானது என அப்போதைய தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் தலைமையிலான, தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர், மவுலானா சையது அஷத் ரஷித், 217 பக்கங்கள் அடங்கிய, சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆவணங்கள் இறுதிகட்டத்தில் உள்ளன. எங்களது சட்ட வல்லுநர் குழு, சட்டத்தை இறுதிவடிவம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என்று உத்தர பிரதேச பொதுச் செயலாளர் ரஷீதி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அவர் இதுபற்றி கூறுகையில், அயோத்தி தீர்பின் ஆரம்ப வரிகளுக்கும், இறுதி பகுதிகளுக்கும் நடுவே முரண்பாடுகள் உள்ளன. எனவே இதை முன்வைத்துதான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கிறோம். பாபர் மசூதியை இடித்தது சட்ட விரோதம் என்று, நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே நிலத்தை எங்கள் தரப்புக்கு தருமாறு கோரிக்கைவிடுக்க உள்ளோம் என்றார்.
நாட்டின் பெரும்பான்மையான முஸ்லீம் மக்கள், இந்த தீர்ப்பால் மகிழ்ச்சியடையவில்லை. நீதிமன்றம் சீராய்வு செய்யும், உரிமையை எங்களுக்கு வழங்கியுள்ளது. சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதே அவர்கள் விருப்பம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.