ஷாக் ரிப்போர்ட்... இந்தாண்டில் மட்டும் 226 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலி
டெல்லி: பன்றிக் காய்ச்சல் காரணமாக இந்தாண்டில் மட்டும் நாடு முழுவதும் 226 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் பன்றி காய்ச்சலின் தாக்கம் மற்றும் உயிரிழப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2019ம் ஆண்டில் பிப். 3 வரை நாடு முழுவதும் 6,600 பேருக்குப் பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் 226 உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக அளவாக இராஜஸ்தான் மாநிலத்தில் 2,263 பேர் இன்புளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த மாநிலத்தில் 85 பேர் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தில் 43 பேரும், பஞ்சாபில் 30 பேரும் பன்றிக் காய்ச்சலால் பலியாகி உள்ளனர். இராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் தாக்கியோருக்குச் சிகிச்சை அளிக்கவும், மேலும் நோய் பரவாமல் தடுக்கவும் சிறப்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பொதுமக்களுக்கு பன்றி காய்ச்சல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.