நாட்டிற்காக உயிர் தியாகம்... 23 சிஆர்பிஎப் வீரர்களின் கடன்கள் தள்ளுபடி... எஸ்பிஐ வங்கி அறிவிப்பு
டெல்லி: ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த 23 பேரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
நாடே சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். இந்தநிலையில், தாக்குதலில் பலியான 40 வீரர்களில் 23 வீரர்கள் எஸ்.பி.ஐ. வங்கியில் கடன் பெற்றிருந்தனர். அவர்கள் பெற்றிருந்த கடன் அனைத்தையும் உடனடியாக தள்ளுபடி செய்வதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் பேசியதாவது, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎப் வீரர்களில் 23 வீரர்கள் தங்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள். அவர்கள் வங்கியில் பெற்றுள்ள கடன்கள் அனைத்தையும் உடனடியாக தள்ளுபடி செய்கிறோம். மேலும், காப்பீடுத் தொகையாக வீரர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க இருக்கிறோம்.
நாட்டின் பாதுகாப்புக்காகச் சென்று உயிர்நீத்த வீரர்கள் நிலை வேதனையளிக்கிறது. மேலும், எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் சிஆர்பிஎப் வீரர்களுக்கு உதவ விருப்பம் இருந்தால், bharatkeveer.gov.in என்ற இணையதளத்தில் நிதியை நேரடியாக அளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.