லோக்சபாவில் இன்றும் அதிமுக அமளி.. மேலும் 7 எம்.பிக்கள் அதிரடி சஸ்பெண்ட்
அமளி ஏற்படுத்தியதால், 24 அதிமுக எம்பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி: லோக்சபாவில் இன்றைக்கும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மேலும் 7 அதிமுக எம்பிக்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே ஒரே பிரச்சனை, கூச்சல், குழப்பங்கள்தான்!!
குறிப்பாக மேகதாது அணைத் திட்டத்திற்கு தங்களது எதிர்ப்பினை அதிமுக எம்பிக்கள் அவையில் பதிவு செய்து வருகின்றனர். இதனால் அவையில் தொடர்ந்து அமளி நிலவுகிறது. எந்த வேலையும் நடக்கவில்லை.
தொடர்ந்து அமளி
இந்த அமளியால் அவையை சபாநாயகர் சுமித்ரா மகாஜனால் நடத்தவே முடியவில்லை. அதனால், அமைதியாக இருக்கும்படி அவையில் பலமுறை அதிமுக எம்பிக்களை கேட்டுக் கொண்டே இருந்தார். எனினும் தொடர்ந்து எம்பிக்களின் அமளி காரணமாக, அதிமுக உறுப்பினர்கள் 24 பேரை 5 நாட்களுக்கு கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக நேற்று அறிவித்தார்.
மேகதாது விஷயம்
இந்த நிலையில் இன்றும் வழக்கம்போல் பாராளுமன்றம் கூடியது. கேள்வி நேரமும் தொடங்கியது. ஆனால் ரபேல் விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் விவாதம் நடந்து கொண்டு இருந்தபோது, அதிமுக எம்.பி.க்கள் மேகதாது விஷயம் சம்பந்தமாக தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.
திரும்பவும் கூச்சல்
அதனால் அவையை தொடர்ந்து நடத்த முடியாததால், மதியம் 12 மணி வரை சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். 12 மணிக்கு பிறகு மீண்டும் அவை கூடியதும், அதிமுக உறுப்பினர்களுடன் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
7 பேர் சஸ்பெண்டு
இதையடுத்து மருதுராஜா, கோபாலகிருஷ்ணன், பன்னீர்செல்வம், அருண்மொழித்தேவன், செந்தில்நாதன், உள்ளிட்ட 7 அதிமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். இந்த 7 பேரும் நடைபெற உள்ள கூட்டங்களில் அதாவது தொடர்ந்து 4 அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாது என்றும் சபாநாயகர் தெரிவித்துவிட்டார். இதேபோல ராஜ்யசபாவிலும் அமளி நிலவியது. அங்கும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.