புதிய சட்டங்களுக்கு எதிராக நாளை விவசாயிகளின் 'பாரத் பந்த்'
டெல்லி: மத்திய பாரதிய ஜனதா அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் நாளை பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
வேளாண் மசோதாக்களை லோக்சபாவிலும் ராஜ்யசபாவில் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த வேளாண் மசோதாக்கள் அனைத்துமே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானவை; விவசாயிகளை வஞ்சிக்கக் கூடியவை என்பதுதான் எதிர்ப்புக்கு காரணம்.
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் சரிவு.. காரணம் என்ன? இன்னும் குறையுமா?
காங். போராட்டம்
இதனால் பஞ்சாப், ஹரியானா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்துகிறது. சில இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பாரத் பந்த்
இதனிடையே 250க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் நாடு தழுவிய பாரத் பந்த போராட்டத்தை நாளை நடத்த அழைப்பு விடுத்துள்ளன. பாரதிய கிஷான் யூனியன் (BKU), அனைத்து விவசாயிகள் யூனியன் (AIFU), அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு (AIKSCC), அனைத்து விவசாயிகள் மகா சங்கம் (AIKM) ஆகியவை கூட்டாக இணைந்து இந்த பாரத் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
லாரி ஓட்டுநர்கள் சங்கம்
விவசாயிகளின் இப்போராட்டத்துக்கு ஆதரவாக லாரி ஓட்டுநர்கள் சங்கமும் நாளை லாரிகளை இயக்கப் போவதில்லை என அறிவித்துள்ளன. இதேபோல் ஓலா கார் ஓட்டுநர்கள் சங்கமும் பாரத் பந்த்தில் இணைவதாக அறிவித்திருக்கின்றன. உத்தரப்பிரதேசத்திலும் இந்த பாரத் பந்த் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம் என அம்மாநில விவசாய சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.
நெடுஞ்சாலைகளில் மறியல்
ஹரியானா, பஞ்சாப்பில் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் முழுமையாக அடைக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், நகரங்கள், கிராமங்களில் நாளை வாகனங்கள் இயக்கப்பட்டால் அவற்றை தடுத்து நிறுத்தி மறியல் செய்யவும் விவசாய அமைப்புகள் முடிவு எடுத்துள்ளனர். இதனையடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.