26/11.. இந்தியக் கடலோரம் முன்பை விட பாதுகாப்பாக மாறியுள்ளது.. கடற்படை தளபதி
Recommended Video
டெல்லி: மும்பையில் தீவிரவாதிகள் கொலை வெறித் தாக்குதல் நடத்தி 10 வருடம் முடிந்துள்ளது. இந்திய கடற்படையின் பலமும், திறமையும் முன்பை விட இன்னும் மேம்பட்டுள்ளதாகவும், எந்தவிதமான தாக்குதலையும் சமாளித்து தடுக்கக் கூடிய வகையில் இந்திய கடற்படை ஆயத்தமாக உள்ளதாகவும் இந்திய கடற்படையின் தலைமைத் தளபதி சுனில் லான்பா கூறியுள்ளார்.
2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, பாகிஸ்தானிலிருந்து கடல் மார்க்கமாக மும்பைக்குள் 10 தீவிரவாதிகள் ஊடுறுவினர். கராச்சியிலிருந்து வந்த இந்த தீவிரவாதிகள் மும்பைக்குள் புகுந்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் மஹால் ஹோட்டல், டிரைடென்ட் ஹோட்டல், யூதர் மையம் ஆகியவற்றில் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். உலகமே அதிர்ந்து போய் இதை பார்த்தது.
கிட்டத்தட்ட 3 நாட்கள் நடந்த இந்த வெறித் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். அதில் 28 பேர் 10 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டார். மற்ற 9 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த பயங்கரவாத சம்பவம் நடந்து முடிந்து 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் கடல் வழிப் பாதுகாப்பு குறித்து கடற்படை தலைமைத் தளபதி சுனில் லான்பா விளக்கியுள்ளார்.
நிறைய மாற்றங்கள்
நாம் இந்த பத்து ஆண்டுகளில் நிறைய தூரம் கடந்து வந்து விட்டோம். நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன. தாக்குதலைத் தடுக்கக் கூடிய அத்தனை வழிமுறைகளையும் நாம் இப்போது கடைப்பிடிக்கிறோம். ஆயத்த நிலையில் இருக்கிறோம். கடலோரப் பாதுகாப்பில் உள்ள குளறுபடிகள் முழுமையாக தீர்க்கப்பட்டு விட்டன. கடல் பகுதி தற்போது முழுமையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் உள்ளது.
ஊடுறுவுவது கஷ்டம்
முன்பு போல எளிதாக இப்போது ஊடுறுவ முடியாது. மிக மிக கடினம். மும்பை தாக்குதல் போன்ற இன்னொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை. அதற்கான வாய்ப்பையும் கடற்படை அத்தனை எளிதாக கொடுத்து விடாது. எந்த ரூபத்தில் எதிரிகள் வந்தாலும் அதைத் தடுக்கக் கூடிய திறமை நமது கடற்படையிடம் உள்ளது. கடல் மார்க்கமாக வரும் எந்த ஆபத்தையும் கடற்படை எளிதாக சந்தித்து தடுக்கும்.
குறைகள் இல்லை
முன்பு கடலோரப் பாதுகாப்பில் இருந்து வந்த சிறு சிறு குறைகள் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டு விட்டன. கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டு விட்டது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, நவீனப்படுத்தப்பட்டுள்ளது. குர்கானைத் தலைமையிடமாகக் கொண்டு கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. இதன் மூலம் 42 ரேடார் நிலையங்கள் வழியாக கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
நெருங்க முடியாது
கரையிலிருந்து 10 கடல் மைல் தொலைவில் நடைபெறுவதை துல்லியமாக கண்காணிக்கக் கூடிய வகையில் அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. இவை தவிர மேலும் 38 ரேடார் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் 7500 கிலோமீட்டர் கடற்கரையோரம் முழுமையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பின் கீழ் உள்ளது.
மீனவர்கள், படகுகள்
இந்திய கடற்பகுதியில் புழங்கும் படகுகளும், மீனவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். எந்தவிதமான சந்தேகமான நடவடிக்கையும் காணப்பட்டால் உடனுக்குடன் அது சரி பார்க்கப்படுகிறது. எனவே மக்கள் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் நிம்மதியாக இருக்க கடற்படை உத்தரவாதம் அளிக்கிறது என்றார் லான்பா.