பெகாசஸ் உளவு வழக்கில் 29 செல்போன்கள் ஆய்வு! விசாரணை அறிக்கைக்கு காலஅவகாசம்! உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் 29 செல்போன்களை விசாரணை குழு ஆய்வு செய்துள்ள நிலையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ஜூன் 20 வரை அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் டெல்லி நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையானது. அவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
போட்டுடைத்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி - பெகாசஸ் வாங்க ஆந்திர அரசை அணுகிய இஸ்ரேல் நிறுவனம்
ஒட்டுகேட்பு விவகாரம்
அதாவது பிரான்ஸின் பர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்தை கண்டுபிடித்தன. பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட பல அரசியல்வாதிகளின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.
விசாரணை குழு
இதையடுத்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கக் கோரி பல்வேறு பொதுநல வழக்குகள் பதிவாகின. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் மூன்று உறுப்பினர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டு ஒட்டுகேட்கப்பட்டுள்ளதா, தரவுகள் திருடப்பட்டுள்ளதா, இதை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஒருவேளை உளவு பார்த்தது என்றால் எந்தச் சட்டத்தின் கீழ், எந்த விதிமுறைகளின் கீழ் இத்தகைய செயல்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்த விவரங்கள் வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வழிக்காட்டியது.
29 செல்போன்கள் ஆய்வு
அதன்படி தற்போது வரை விசாரணை குழு 29 செல்போன்களை ஆய்வு செய்துள்ளது. இதற்கிடையே வழக்கு இன்று தலைமை நீதிபதி என்வி ரமணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை குழு தரப்பில் இதுவரை இந்த வழக்கில் 29 செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தொடர்புடைய பத்திரிகையாளர்கள், பிற துறை நிபுணர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான தகவல்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
ஜூன் 20 வரை அவகாசம்
இதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து, விசாரணைக் குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஜூன் 20 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை அறிக்கை வெளியானால் இந்திய அரசியலில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.