எல்லாம் "அந்த" கணக்குதான்.. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இருந்து 29% பேருக்கு பத்ம விருதுகள்!
டெல்லி: இந்தாண்டு தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலிருந்து மட்டும் 29% பேருக்கு 2021ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுவாழ்வு, கலை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படும். அதன்படி இந்தாண்டிற்கான பத்ம விருதுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட ஏழு பேருக்குப் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
அதேபோல தமிழக்தைச் சேர்ந்த சாலமன் பாப்பயா, பாம்பே ஜெயஸ்ரீ, 2 ரூபாய் டாக்டர் டாக்டர் திருவேங்கடம் வீரராகவன், சாந்தி கியர்ஸ் பி சுப்பிரமணியன் உள்ளிட்ட 11 பேருக்குப் பத்ம ஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அதிக விருதுகள்
இந்த ஆண்டு ஒட்டு மொத்தமாக 119 பேருக்குப் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலிருந்து மட்டும் 34 (29%) பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை சேர்ந்த 11 பேருக்கும், அசாமை சேர்ந்த 9 பேருக்கும், மேற்கு வங்கத்தை சேர்ந்த ஏழு பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல கேரளாவிலிருந்து ஆறு பேருக்கும் புதுச்சேரியிலிருந்து ஒருவருக்கும் பத்ம விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து மாநிலங்களிலும் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
பத்ம விருதுகள்
காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அசாமின் முன்னாள் முதல்வருமான தருண் கோகய்க்கு பத்ம பூஷன் விருது அளிக்கப்பட்டது. அதேபோல, கேரளாவிலிருந்து பின்னணி பாடகி சித்ரா, மேற்கு வங்கத்திலிருந்து கார்டூன் நாராயண் தேப்நாத், டேபில் டென்னிஸ் வீராங்கனை மவுமா தாஸ் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியைச் சேர்ந்த சுவாமி விவேகானந்த மருத்துவ மிஷனை தொடங்கிய தனஞ்சய் திவாகர் சாக்தியோவுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் விமர்சகர்கள் கருத்து
பத்ம விருதுகள் பொதுவாழ்வு, கலை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றாலும் இதில் அரசியல் கட்சிகளின் தலையீடு இருப்பதாகக் கடந்த காலங்களில் பாஜகவும் சரி, காங்கிரசும் சரி குற்றஞ்சாட்டியிருந்தன. கடந்த காலங்களிலும் பத்ம விருதுகள் அரசியல் காரணங்களுக்காக வழங்கப்பட்டிருந்தாலும்கூட, இந்த முறை அதை அடுத்த கட்டத்திற்கே பாஜக அரசு எடுத்துச் சென்றுவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசியல் லாபம் இருக்காது
இது குறித்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழக பேராசிரியர் முஜிபுர் ரஹ்மான் கூறுகையில், "எந்த விருதாக இருந்தாலும் அரசியல் சார்பு இல்லாமல் ஒருவரின் சாதனைக்காகவே வழங்கப்பட வேண்டும். இது அரசியலாக்கப்படுவது தவறுதான். இருந்தாலும், இதனால் தேர்தல் காலத்தில் பெரியளவு லாபம் இருக்காது. தமிழகம் மற்றும் கேரளாவில் நுழைய பாஜக நீண்ட காலமாக முயன்று வருகிறது. ஆனால், விருது கொடுத்து உள்ளே நுழைய முயல்கின்றனர் என்ற குற்றச்சாட்டு அபத்தமானது" என்றார்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்பியா ஸ்ரினேட். கூறுகையில், "நாட்டின் உயரிய விருதுகள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தக்கூடாது. ஆனால், தேர்தல் மாநிலங்களுக்கு மட்டும் அதிக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சரியில்லை. பாஜக அரசு நிறுவனங்களை இப்படி அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது. இது சரியான அணுகுமுறை இல்லை" என்றார்.
பாஜக பதில்
ஆனால், இந்தக்குற்றச்சாட்டுகளை பாஜக முற்றிலுமாக மறுத்துள்ளது. ஒருவரின் சாதனையின் அடிப்படையிலேயே அவருக்கு விருது அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு மிட்டல் தெரிவித்தார். வக்கிரமான மனம் கொண்டவர்களால் தான் எல்லாவற்றிலும் அரசியல் செய்கின்றனர் என்றும் காங்கிரஸ் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.