2ஜி மேல்முறையீட்டு வழக்கு...வாதம் துவங்கியது...விசாரணை நாளை ஒத்தி வைப்பு!!
டெல்லி: 2ஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்துள்ளது. இன்று முதல் இந்த வழக்கு தினமும் விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில் இந்த வழக்கு நாளையும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் மத்திய அமலாக்கத்துறை வழக்கு தொடுத்து இருந்தன. இதில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 2017 டிசம்பரில் தீர்ப்பு அளித்து இருந்தார்.
குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது என்று அந்த தீர்ப்பில் சைனி தெரிவித்து இருந்தார். ஆனால், இந்த தீர்ப்புக்கு எதிராக, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு, மார்ச் மாதம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனுக்களை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேத்தி ஏற்று இருந்தார், 2ஜி வழக்கு விசாரணை இன்று முதல் தினமும் நடைபெறும் என கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று விசாரணை துவங்கியது.
இன்றைய விசாரணையின்போது மேல் முறையீடு செய்ய சிபிஐக்கு மத்திய அரசு அளித்த அனுமதி கடிதத்தை அளிக்க வேண்டும், சிபிஐ கையேட்டை அவர்களே கடைபிடிப்பதில்லை என்றும் எதிர்மனுதாரர்களின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் வாதிட்டார்.
இன்று இரவுக்குள் மாநிலங்களுக்கு...ரூ. 20,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு...நிர்மலா சீதாராமன் உறுதி!!
இதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு, "சிபிஐக்கும் மத்திய அரசுக்கும் இடையே இருப்பது நிர்வாக ரீதியானது. ஆதலால், ஆவணங்களை எதிர்மனுதாரர்களுக்கு தர வேண்டிய அவசியம் இல்லை" என்று தெரிவித்தது.
இந்நிலையில் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது. சிபிஐ தரப்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் ஆஜராகி இருந்தார்.
இந்த் மேல்முறையீட்டு வழக்கிற்கு இதில் குற்றம்சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டு இருக்கும் ஆ.ராசா, தொழிலதிபர் சாஹித் பால்வா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.