வேளாண் மசோதா...பஞ்சாபில் வெடித்தது விவசாயிகள் போராட்டம்... 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் ரத்து!!
டெல்லி: வேளாண் மசோதாவை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ரயில் மறியல் போராட்டம் அறிவித்து இருந்தனர். அதன்படி போராட்டத்தை விவசாயிகள் துவங்கியுள்ளனர். பாதுகாப்பை முன்னிட்டு 14 சிறப்பு ரயில்கள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
மக்களின் பாதுகாப்பு மற்றும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுத்து இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேளாண் மசோதாவை எதிர்த்து...இன்று முதல் 3 நாட்களுக்கு பஞ்சாபில் ரயில் மறியல் போராட்டம்!!
அமிர்தசரஸ்
அமிர்தசரஸ்-மும்பை இடையே இயங்கும் கோல்டன் டெம்பிள் மெயில், ஹரித்துவார்-அமிர்தசரஸ் இடையே இயங்கும் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ், புதுடெல்லி-ஜம்மு தாவி, கரம்பூமி இடையே இயங்கும் அமிர்தசரஸ்-நியூ ஜல்பைகுரி, நந்தேட் - அமிர்தசரஸ் இடையே இயங்கும் சச்காந்த் எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ்-ஜெயநகர் இடையே இயங்கும் ஷஹீத் எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
போராட்டம்
கிசான் மஸ்தூர் சங்கர்ஸ் கமிட்டி முதலில் ரயில் மறியலில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தது. இதையடுத்து பல்வேறு விவசாய அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன.
ஃபெரோஸ்பூர்
பர்னாலா, சாங்ரூர் ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். அமிர்தசரஸில் இருக்கும் தேவிதாஸ்பூர் மற்றும் ஃபெரோஸ்பூரில் இருக்கும் பாஸ்தி தாங்கா ஆகிய இடங்களில் ரயில் மறியலில் ஈடுபடுவதற்கு கிசான் மஸ்தூர் சங்கர்ஸ் முடிவு செய்துள்ளது.
அரசியவாதிகள்
தங்களுக்கு பல்வேறு அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாக கிசான் மஸ்தூர் சங்கர்ஸ் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், ஆகியோரும் விவசாயிகளுக்கான போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். பஞ்சாப் விவசாயிகள் இன்று முதல் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வரை ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்து இருக்கிறோம்'' என்று கிசான் மஸ்தூர் சங்கர்ஸ் அமைப்பின் தலைவர் சத்னம் சிங் பன்னு தெரிவித்துள்ளார்.
சிறை பிடிப்பு
விவசாய மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கும் பாஜக தலைவர்கள், எம்பிக்களை சிறை பிடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நாளை பஞ்சாப் முழுவதும் போராட்டம் நடத்துவதற்கு 31 விவசாய அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த மசோதா குறைந்தபட்ச விலையை பாதிக்கும் என்றும், விவசாயம் கார்பரேட்களின் கைகளுக்கு செல்லும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது ஜனாதிபதியின் கையெழுத்துக்காக காத்திருக்கிறது. இவர் கையெழுத்து இட்டால் இந்த மசோதாக்கள் சட்டமாகிவிவிடும். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த மசோதா ராஜ்ய சபாவில் நிறைவேறுவதற்கு முன்பு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.