சினிமா பார்க்குறவங்க குறையல.. 120 கோடி வசூல்.. இதுவா பொருளாதார வீழ்ச்சி.. ரவி சங்கர் பிரசாத் லாஜிக்
டெல்லி: இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடையவில்லை என்பதற்கு, திரைப்படங்களின் வசூல் ஒரு உதாரணம் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது, கார்களின் விற்பனை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. பல தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர், என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது ரவிசங்கர் பிரசாத் ஒரு வித்தியாசமான கருத்தை முன்வைத்துள்ளார்.
அக்டோபர் 2ம் தேதி தேசிய அளவில் விடுமுறை தினம். அ்தே நாளில் மட்டும் மூன்று ஹிந்தி திரைப்படங்கள் 120 கோடி ரூபாய்க்கு வணிகம் செய்துள்ளன. நாட்டின் பொருளாதாரம் வலுவாக இல்லாவிட்டால் எப்படி மூன்று படங்கள் இந்த அளவுக்கு ஒரே நாளில் வசூலில் சாதனை படைக்க முடியும்.
மின்னணு சாதன பொருட்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக சேவை நிறுவனங்கள், அனைத்துமே சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. நாங்கள் என்றுமே ஒவ்வொரு நபருக்கும் அரசு வேலை வாய்ப்பு வழங்கும் என்று தெரிவித்தது கிடையாது. சிலர் மக்களை அதுபோல திசை திருப்புகிறார்கள். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் பேசினார்.
சமீபத்தில் சர்வதேச நிதியக மேலாண் இயக்குனர், அளித்த பேட்டியில் உலகம் முழுக்கவே பொருளாதார மந்த நிலை இருந்தாலும், இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இது அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, என்று தெரிவித்தார். இது தொடர்பாக ரவிசங்கர் பிரசாத்திடம் கேட்டபோது, சர்வதேச நிதி அமைப்பு இந்தியா தொடர்பாக எடுத்து வரும் ஆய்வுகள் இன்னும் முழுமையடையவில்லை, என்று பதிலளித்தார்.