6 தடுப்பு மருந்துகளில் 3 வெற்றி நிச்சயம்... இந்தியாவை நம்பி உலக நாடுகள் உள்ளன... பில் கேட்ஸ்!
டெல்லி" தற்போது மனித பரிசோதனையில் இருக்கும் 6 முக்கிய கொரோனா தடுப்பு மருந்துகளில் மூன்று கட்டாயமாக வெற்றி பெறும் என்று மைரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். தடுப்பு மருந்து தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் இந்தியாவை உலக நாடுகள் பெரிய அளவில் கொரோனா தடுப்பு மருந்துக்கு நம்பி இருப்பதாக கூறியிருந்த நிலையில் பில் கேட்ஸ் இதை தெரிவித்துள்ளார்.
பில் அண்ட் மெலிந்தா பவுண்டேஷன் துணை நிறுவனராக இருக்கும் பில் கேட்ஸ் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்து இருந்த பேட்டியில், ''தற்போது உலக அளவில் மூன்று தடுப்பு மருந்துகள் மனித ஆய்வில் இருக்கிறது. இவற்றில் எது வெற்றி பெற்றாலும் பெரிய அளவில் தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இந்தியாவில் தயாராகிறது ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து.. தனியார் மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்
தயாரிப்பு திறன்
இந்தியாவுக்கு பெரிய அளவில் இந்த தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் திறன் இருக்கிறது. அதற்கான தயாரிப்பு திறன் வாய்ந்த நிறுவனங்களும் இந்தியாவில் அதிகளவில் உள்ளன. அவர்களால் பெரிய அளவில் தயாரித்து உலக நாடுகளுக்கு அளிக்க முடியும்.
சுகாதாரம்
நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் வரும் 2022ஆம் ஆண்டில் கொரோனாவை விரட்டி விடலாம். சுகாதாரத்துக்கு அனைத்து நாடுகளும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால், கொரோனா தாக்கத்துக்குப் பின்னர் பெரும்பாலான நாடுகள் பொருளாதாரத்தில் சரிவைக் கண்டுள்ளன. பணக்கார நாடுகளைப் போல் கூடுதலாக நிதியை பெற முடியாத நாடுகள் பெரிய அளவில் சிக்கலை சந்திக்கும்.
ஆஸ்ட்ராஜெனிகா
உலக அளவில் தடுப்பு மருந்து தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சீரம், பயோஇ, பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் பெரிய அளவில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் திறன் கொண்டவை. ஆஸ்ட்ராஜெனிகா, நோவாக்ஸ், சனோஃபி, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் குறைந்த விலையில் மருந்து தயாரிக்கும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவர்கள் அனைவரும் மூன்றாம் கட்ட மனித பரிசோதனையில் உள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தம்
இந்தியாவில் புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துடன் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் இவரது பில் அண்ட் மெலிந்தா பவுண்டேஷன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. உலக அளவில் அதிகமான தடுப்பு மருந்துகளை வழங்கும் நிறுவனமாக சீரம் இன்ஸ்டிடியூட் இருந்து வருகிறது. குறிப்பாக ஏழை நாடுகளுக்கு அதிகளவில் தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறது.