3 லோக்சபா, 7 சட்டசபை இடைத்தேர்தல்- பாஜக அமோகம்! ஆம் ஆத்மி, அகிலேஷின் சமாஜ்வாதிக்கு அதிர்ச்சி!
டெல்லி: 5 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் 3 லோக்சபா மற்றும் 7 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால் சங்ரூர் லோக்சபா தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்து அகாலிதளம் (மான் பிரிவு) வெற்றியை அறுவடை செய்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி ஆதிக்கம் செலுத்தும் 2 தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது
டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், திரிபுரா, ஆந்திரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் 3 லோக்சபா, 7 சட்டசபை தொகுதிகளில் கடந்த 23-ந் தேதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. திரிபுராவின் அகர்தலா, ஜூபராஜ் நகர், சுர்மா, பர்தோவாலி டவுன்; ஆந்திராவின் அத்மகூர், ஜார்க்கண்ட்டின் மந்தார், டெல்லியி ராஜேந்தர் நகர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள்; பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர், உ.பி.யின் ஆஸம்கர், ராம்பூர் ஆகிய 3 லோக்சபா தொகுதிகளில் தேர்தல்கள் நடைபெற்றன.
உ.பி.யில் ஆஸம்கர் லோக்சபா தொகுதி எம்.பி.யாக இருந்தவர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ். அவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது. மற்றொரு சமாஜ்வாதி தலைவர் ஆஸம்கான், எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால் ராம்பூர் லோக்சபா தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த 2 தொகுதிகளையும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சமாஜ்வாதி உள்ளது. ஆனால் 2 தொகுதிகளிலும் ஆளும் பாஜக வெல்ல வேண்டிய நெருக்கடியில் இருந்தது. டெல்லி ராஜேந்தர் நகர் தொகுதி எம்.எல்.ஏ. ராகவ் சட்டா, ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யானார். இதனால் இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தொகுதியை ஆம் ஆத்மியை தக்க வைக்கவும் அக்கட்சியிடம் இருந்து கைப்பற்ற பாஜகவும் முனைப்பாக இருந்தன.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. சங்ரூர் தொகுதி எம்.பி.யான பகவந்த் மான், மாநில முதல்வரானதால் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனால் ஆம் ஆத்மி கட்சிக்கு இத்தொகுதி முக்கியமானது. சங்ரூரில் காங்கிரஸ் மாஜி எம்.எல்.ஏ. தல்வீர்சிங் கோல்டி, அகாலிதளம் (மான் பிரிவு) கட்சியின் சிம்ரஞ்சித்சிங் மான், அகாலிதளம் சார்பில் கமல்தீப் கவுர் ரஜோனா போட்டியிட்டனர். முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் படுகொலையாளி ரஜோனாவின் மனவி கமல்தீப் கவுர். திரிபுராவில் முதல்வர் மாணிக் சஹா, பர்தோவாலி டவுன் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். இதனால் இத்தொகுதியில் பாஜக வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற நிலை இருந்தது. இத்தொகுதிகளில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
பஞ்சாப் மாநிலத்தில் சங்ரூர் தொகுதியில் அகாலி தளம் கட்சி (அமிர்தசரஸ்-மான்பிரிவு) வேட்பாளர் சிம்ரஞ்சித் சிங் மான் அமோக வெற்றியைப் பெற்றார். இத்தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் 2-வது இடத்தைதான் பெற முடிந்தது. காங்கிரஸ் 3-வது இடத்திலும் அகாலிதளம் 4-வது இடத்திலும் இருந்தது. டெல்லி ராஜேந்தர்நகர் சட்டசபை தொகுதியில் ஆம் ஆத்மி வென்றது. ஆந்திராவில் அத்மகூர் தொகுதியில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வென்றது.
திரிபுராவில் முதல்வர் மாணிக் சஹா, தாம் போட்டியிட்ட பர்தோவாலி டவுன் தொகுதியில் வென்றார். அதேபோல் சுர்மா, ஜூபராஜ்நகர் தொகுதியிலும் பாஜகவுக்கே வெற்றி முகம். அகர்தலாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சுதீப் ரோய் பர்மன் வெற்றியின் பக்கம். ஜார்க்கண்ட்டின் மந்தார் தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றியை நோக்கி முன்னிலை வகிக்கிறது. உ.பி.யின் ஆஸம்கர், ராம்பூர் லோக்சபா தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி வெல்லும் என கூறப்பட்ட நிலையில் பாஜக முன்னிலையில் உள்ளது.