யாரை விடுவது.. யாரை சேர்ப்பது.. சுவாரஸ்யக் குழப்பத்தில் ராகுல் காந்தி
டெல்லி: மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெற்ற சிறப்பான வெற்றியின் மூலமாக ஓவர்-நைட்டில், புகழின் உச்சத்துக்கு சென்ற ராகுல் காந்தி, இன்று சுவாரஸ்யமான சிக்கலில் மூழ்கியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதுவுமே தெரியாது. அவர் நிர்வாக திறமையற்றவர் என்று பிரதமர் மோடி உட்பட, பாஜகவின் பெரும்பாலான தலைவர்கள் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.
பப்பு என்று மிகவும் கீழே இறங்கிச் சென்று கிண்டல் செய்த பாஜக தலைவர்களும் உண்டு. ஆனால் 5 மாநில தேர்தலில் அதிடி காட்டி அசத்தி விட்டார் ராகுல் காந்தி.
இமேஜ் கூடியது
ஆனால் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளால், ராகுல் காந்தியின் இமேஜ் ஒரே நாளில் நாடு முழுக்க உயர்ந்துவிட்டது. அதிலும் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து மூன்று முறையாக ஆட்சியைப் பிடித்த பாஜகவை வீட்டுக்கு அனுப்பி வைத்தது காங்கிரஸ். ராஜஸ்தானிலும் பலமான வசுந்தரா ராஜே தலைமையிலான அரசு தோற்கடித்து காட்டியுள்ளது ராகுல் படை. எனவே மீடியாக்கள் மோடியை விட்டுவிட்டு ராகுல் காந்தியைத்தான் 2 நாட்களாக ஃபோகஸ் செய்து வருகின்றன.
சுவாரஸ்யமான சிக்கல்
ஆனால் இந்த மூன்று மாநிலங்களுக்கும் முதல்வர்களை தேர்வு செய்வதில்தான் ராகுல்காந்திக்கு சுவாரஸ்ய சிக்கல் ஏற்பட்டு விட்டது. காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு 3 மாநில முதல்வர்கள் தேர்ந்தெடுக்கும் இந்த பணி அவரது அரசியல் நிர்வாகத் திறமைக்கு முதல் முறையாக, ஒரு சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது முதல்வருக்கான தேர்வு மட்டுமின்றி, இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான முதலீடு என்ற வகையிலும் பார்க்கப்படுகிறது.
ஆனால் இதிலும் கடந்து வந்து கலக்குவார் ராகுல் காந்தி என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஜாக்கிரதையாக தேர்வு
ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தபட்சம் இரு முக்கிய தலைவர்களாவது முதலமைச்சருக்கான பந்தயத்தில் உள்ளனர். இதில் ஒருவரை தேர்ந்தெடுத்து மற்றொருவரை புறக்கணிப்பது என்பது அந்தந்த மாநிலங்களில் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி விடும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் கனவு கலைந்து விடும் என்ற அச்சம் உள்ளது. எனவே கம்பி மீது நடப்பது போன்ற மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ராகுல் காந்தி தள்ளப்பட்டார். காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி, பாஜகவும் கூட ராகுல்காந்தி இதில் எந்த மாதிரி முடிவெடுக்கப் போகிறார் என்று உன்னிப்பாக கவனித்து வருகிறது.
பிரியங்கா வருகை
மூன்று மாநிலங்களுக்கும் முதல்வர்கள் பெயரை அறிவித்து, அதேநேரம், கட்சிக்குள் பிளவு ஏற்படாமல் ஒருங்கிணைத்தும் செல்ல செய்வார் என்று எதிர்பார்ப்பு கடைமட்ட தொண்டர்களுக்கும் இருந்தது. ஆனால் ராகுல் காந்தி, கடந்த இரு நாட்களாக தொடர்ந்து ஆலோசனை நடத்தியும் கூட, எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. இந்த நிலையில் ராகுல் காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி, அதைத் தொடர்ந்து அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோர் டெல்லியில் உள்ள ராகுல் காந்தி இல்லத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களும் முதல்வர் தேர்வு பற்றி, ஆலோசனை நடத்தி வருகின்றனர்.