மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்
டெல்லி: மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் இன்று தனி விமானம் மூலம் டெல்லி திரும்பினர்.
மெக்சிகோவில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறுகின்றனர். இது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
இதனால் சட்டவிரோதமாக குடியேறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மெக்சிகோவுக்கு அமெரிக்கா பல்வேறு கடுமையான நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதனையடுத்து மெக்சிகோவும் முழு வீச்சில் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நடவடிக்கைகளின் போது அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய காத்திருந்த 311 இந்தியர்கள் சிக்கினர். இவர்களில் பெண் ஒருவரும் அடக்கம். இவர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசுடன் மெக்சிகோ பகிர்ந்து கொண்டது.
அனைவரது விவரங்களையும் உறுதி செய்த பின்னர் நேற்று தனி விமானம் மூலம் 311 பேரையும் டெல்லிக்கு நாடு கடத்தியது. இவர்கள் அனுப்பி வைக்கப்பட்ட விமானம் இன்று காலை டெல்லியை வந்தடைந்தது.