தமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்
டெல்லி: நாடு முழுக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ள 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக 33 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) ஐஜி அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று, தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் யோகேஷ் சந்தர் மோடி மற்றும் ஐஜி அலோக் மிட்டல் கூட்டாக அளித்த பேட்டி: சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். இதனடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 பேர், கேரளாவை சேர்ந்த 17 பேர் மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 14 பேர் உட்பட மொத்தம் 127 பேரை கைது செய்துள்ளோம்.
இதில், தமிழகம் மற்றும் கேரளாவில் கைதுசெய்யப்பட்டுள்ள தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் தாங்கள் ஜாஹ்ரன் ஹஸிம் என்பவரின் வீடியோ உரைகளைக் கேட்டு தான் தீவிரவாத எண்ணத்துக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர். இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின தொடர் வெடிகுண்டு தாக்குதலில் மூளையாக செயல்பட்டது இதே ஜாஹ்ரன் ஹஸிம்தான்.
கைது செய்யப்பட்டுள்ள மற்றவர்களில் பெரும்பாலானோர் மதப் பிரச்சாரகர் ஜாகிர்நாயக்கின் பேச்சை வீடியோவில் கேட்டு, தீவிரவாத எண்ணத்தை வளர்த்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுதவிர காலிஸ்தான் பயங்கரவாத இயக்கம் தொடர்பாகவும் எங்களுக்கு துப்பு கிடைத்துள்ளது. சீக்கியர்கள் நடுவே இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் இந்த அமைப்பு தொடர்பாக 5 பேரை உத்தரபிரதேச மாநிலத்தில் கைது செய்துள்ளோம். இவ்வாறு அலோக் மிட்டல் தெரிவித்தார்.
ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் (JMB)அமைப்பு வங்கதேசத்தை மையமாகக் கொண்ட ஒரு தீவிரவாத அமைப்பாகும். இது பீகார், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தங்கள் ஆதரவாளர்களை வளர்த்தெடுத்து வருகிறது. தீவிரவாத செயல்களை அரங்கேற்றும் திட்டத்தோடு பலரையும் மூளைச்சலவை செய்து வருகிறது.
பெங்களூரில் சுமார் 20 மறைவிடங்களில், ஜேஎம்பி அமைப்பினர் பதுங்கியுள்ளதாக துப்பு கிடைத்துள்ளது. தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள கிருஷ்ணகிரி மலைப்பகுதியில், ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் அமைப்பினர், ராக்கெட் லாஞ்சர் சோதனைகளை நடத்தியுள்ள தகவலும் விசாரணையில் எங்களுக்கு தெரியவந்துள்ளது.
மியான்மரில் ரோஹிங்யா முஸ்லீம்கள் தாக்குதலுக்குள்ளானதற்கு பழி தீர்க்க, ஜேஎம்பி அமைப்பு புத்த வழிபாட்டு தலங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தும் திட்டத்தோடு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.