லாக்டவுன்: இந்தியாவின் 34% குடும்பங்களில் உச்சகட்ட வறுமை- ஒருவாரத்துக்கு மேல் வாழவே முடியாத நிலைமை!
டெல்லி: கொரோனா லாக்டவுனால் இந்தியாவின் 34% குடும்பங்கள் பிறரது உதவி இல்லாமல் ஒரு வாரத்துக்கு மேல் உயிரே வாழ முடியாத அளவுக்கு வறுமை கோரத்தாண்டவமாடுவதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy) தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டன் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்பட உள்ளது.
நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, லாக்டவுன் நீட்டிக்கப்படும்; ஆனால் புதிய முறையில் லாக்டவுன் அமலில் இருக்கும் என கூறியிருந்தார். இந்த நிலையில் லாக்டவுன் கால இந்திய குடும்பங்களின் நிலை குறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ளவை:
மோடி அரை மணி நேரம் பேசினார்.. என்ன பேசினார் என்பதுதான் புரியவில்லை.. ஹிந்தி பேசும் மக்களே ஆதங்கம்
வேலைவாய்ப்பு இழப்பு
இந்தியாவின் 84% குடும்பங்களின் மாத வருமானம் என்பது குறைந்து போயுள்ளது. நாட்டில் பணிபுரியக் கூடிய வயதினரில் 4-ல் 1 பங்கினர் தற்போது வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். மார்ச் 21-ந் தேதியன்று வேலைவாய்ப்பின்மை என்பது 7.4% ஆக இருந்தது. இது மே 5-ந் தேதியன்று 25.5% ஆக கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் 2.7 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பு
அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பு தொடர்பாக நகர்ப்புறம் மற்றும் கிராப்புறங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நகரங்களில் 65% குடும்பங்களில் ஒரு வாரத்துக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன. ஆனால் கிராமப்புறங்களில் 54% குடும்பங்கள்தான் அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு இருப்பதாக தெரிவித்துள்ளன.
வாழவே முடியாத நிலை
இந்தியா முழுவதும் 34% குடும்பங்கள் (மூன்றில் ஒரு பங்கு) பிறரது உதவி இல்லாமல் ஒரு வாரத்துக்கு மேல் உயிர் பிழைக்கவே முடியாது என்கிற நிலையில்தான் உள்ளன. ஆகையால் இத்தகைய குடும்பங்களுக்கான உதவிகள் உடனடியாக சென்றடைய வேண்டும் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைமை பொருளாதார வல்லுநர் கெளசிக் கிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிப்படையும் மாநிலங்கள்
தற்போதைய நிலையில் டெல்லி, பஞ்சாப், கர்நாடகா மாநில மக்கள் குறைவான பாதிப்பைத்தான் எதிர்கொள்ளப் போகிறார்கள். ஆனால் பீகார், ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநில மக்கள் மிக மோசமான பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.