அக்னிபாத் திட்டம் பற்றி தகவல் பரப்பிய 35 வாட்ஸ்அப் குழுக்கள் முடக்கம்.. 10 பேர் கைது..!
டெல்லி: அக்னிபாத் திட்டம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாக 35 வாட்ஸ் அப் குழுக்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 'அக்னிபாத்' என்ற திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜூன் 14ல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்களுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருக்க வாய்ப்பளிக்கப்படும். 4 ஆண்டு பணியை முடித்து வெளியில் செல்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது. இந்த திட்டம் மூலம் இந்தியாவின் முப்படைகளையும் இளமையாக இளைஞர்கள் நிறைந்ததாக வைத்து கொள்ளலாம் என ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஆனால் அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத் திட்டம் நீண்டநாள் ராணுவ சேவையாற்ற விரும்பும் இந்திய இளைஞர்களின் விருப்பத்துக்கு மாறாக உள்ளது. மேலும் ஒப்பந்த பணியாக ராணுவ சேவை மாற்றப்படுவதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. ரயில்கள் எரிக்கப்பட்டு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதனிடையே இளைஞர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. நேற்று காங்கிரஸ் கட்சி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டது. தொடர்ந்து இந்திய ராணுவத்தின் மூத்த நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து, அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ராணுவத்தில் சேர்க்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்தார். இருந்தும் இளைஞர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
’அக்னிபத்’ விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்! மோடி, அமித்ஷா திட்டமெல்லாம் சாபக்கேடு! சீறிய நாதக சீமான்!
அதேபோல் ராணுவத்தில் சேர பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தான் இளைஞர்களை தூண்டிவிடுவதாக தகவல்கள் வெளியாகியது. இந்தநிலையில், அக்னிபாத் திட்டம் குறித்து தவறான தகவல் பரப்பியதாக கூறி 35 வாட்ஸ் அப் குழுக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இதுபோல் அரசின் திட்டத்திற்கு எதிராக தவறான தகவல்களை பரப்புபவர்களை கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், போராட்டத்தை தூண்டியதற்காகவும், அக்னிபாத் திட்டம் பற்றி தவறான தகவல்களை பரப்பியதாகவும் கூறி 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.