காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் ஏன் தாமதம்? 35 ஆண்டுகளுக்கு முன் ராஜ்யசபாவில் பேசிய ஜெ.
டெல்லி: 1984-ம் ஆண்டு ராஜ்யசபாவில் பேசிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் ஏன் தாமதம் என கேள்வி எழுப்பினார். இன்று மத்திய அரசு, அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் ஒரு அங்கமாக்கி இருக்கிறது.
1984-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி ராஜ்யசபாவில் ஜெயலலிதா உரையாற்றினார். காஷ்மீர் விவகாரம் குறித்து ஜெயலலிதா அன்று பேசியதாவது:
அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவுக்கு அதிமுகவும் பலியாகி இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லா அரசாங்கம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளை 356-வது பிரிவின் கீழ் கலைப்பது புதியதும் அல்ல... இதுவே கடைசியுமானதும் அல்ல.
இந்திய அர்சியல் சாசனத்தில் 356-வது பிரிவு தொடர்ந்து நீடிக்கத்தான் போகிறது. உள்துறை அமைச்சருக்கு 2 கேள்விகளை நான் முன்வைக்க விரும்புகிறேன்.
1) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சியை ஏற்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா? 2) ஜம்மு காஷ்மீரை இந்திய ஒன்றியத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட பகுதியாக, பிற மாநிலங்களைப் போல இந்திய அரசியல் சாசனத்தின் கீழான ஒரு மாநிலமாக கொண்டுவருவதில் ஏன் தாமதம்?
இவ்வாறு ஜெயலலிதா 35 ஆண்டுகளுக்கு முன்னர் கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது மத்திய அரசு ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்ததுடன் அம்மாநிலத்தையே 2 யூனியன் பிரதேசங்களாக துண்டாடி இருக்கிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ராஜ்யசபாவில் அதிமுக முழு ஆதரவையும் தற்போது தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.