கொரோனாவுக்கு 382 மருத்துவர்கள் பலி... மத்திய அரசு பாசாங்குத்தனம்... மருத்துவர் கழகம் கண்டனம்!!
டெல்லி: நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 382 மருத்துவர்கள் உயிரிழந்து இருப்பதாக இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது. லோக் சபாவில் இதுகுறித்த தகவல் தங்களிடம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருந்த நிலையில் இந்திய மருத்துவக் கழகம் இந்தத் தகவலை வெளியிட்டு மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு இந்தியாவில் எவ்வளவு மருத்துவர்கள் உயிரிழந்து இருக்கின்றனர் என்று தங்களுக்கு தெரியாது என்றும், அதுகுறித்த தகவல் தங்களிடம் இல்லை என்று லோக் சபாவில் சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே தெரிவித்து இருந்தார்.
சீனா ஊடுருவல்- ராஜ்யசபாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று அறிக்கை தாக்கல்
ஹர்ஷ் வர்தன்
மேலும், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் மாநிலங்களின் கீழ் வருவதால் மத்திய அரசிடம் எந்த இழப்பீட்டுத் தகவலும் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார். இதற்கு முன்னதாக அவையில் பேசி இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் இதுகுறித்து எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
அலட்சியம்
இது இந்திய மருத்துவக் கழகத்தை கோபமடையச் செய்தது. இதற்கு பதில் அளித்த இந்திய மருத்துவக் கழகம், மத்திய அரசு நாட்டின் ஹீரோக்களிடம் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டு, அவர்களை கைவிட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு "தொற்றுநோய் சட்டம் 1897 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தை நிர்வகிப்பதற்கான தார்மீக அதிகாரத்தை இழக்கிறது என்று கண்டித்துள்ளனர்.
அறிக்கை
இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''நாட்டில் 382 மருத்துவர்கள் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்து இருக்கின்றனர். 27 வயது மருத்துவர் முதல் 85 வயது மருத்துவர் வரை உயிரிழந்து இருக்கின்றனர். கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்களின் சேவையை அமைச்சர் அங்கீகரிக்கவில்லை.
அருவருக்கத்தக்கது
இந்த தகவல் நாட்டுக்கு தேவையற்றது என்று கருதி இருப்பது மிகவும் அருவருக்கத்தக்கது. மருத்துவர்கள் அவசியம் இல்லாதவர்கள் என்று மத்திய அரசு கருதி இருக்கிறது. இந்தியாவைப் போன்று வேறு எந்த நாடும் இந்தளவிற்கு மருத்துவர்களை, சுகாதார ஊழியர்களை கொரோனாவுக்கு இழக்கவில்லை.
மத்திய அரசு
நாட்டு மக்களுக்கு உறுதுணையாக நின்றவர்களை மத்திய அரசு கைவிட்டுள்ளது. உயிரிழக்கும் மருத்துவர்களுக்கு என்று மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. என்னவானது என்று தெரியவில்லை. உயிரிழந்தவர்களை மத்திய அரசு கைவிட்டுள்ளது.
பாசாங்குத்தனம்
ஒரு பக்கம் மருத்துவர்களை கொரோனா வீரர்கள், ஹீரோக்கள் என்று அழைத்துக் கொண்டு, மறுபக்கம் அவர்களை கைவிடுவது மத்திய அரசின் பாசாங்குத்தனத்தை காட்டுகிறது'' என்று தெரிவித்துள்ளது.
தேசிய திட்டம்
கடந்த மார்ச் மாதம் 22.12 லட்சம் சுகாதாரப் பணியார்களுக்கு என்று ரூ. 50 லட்சம் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. தேசிய திட்டத்தின் கீழ் இந்த காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இன்னும் இந்த திட்டம் மருத்துவர்களை சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.