டெல்லி சம்பவங்களில் 394 போலீசார் படுகாயம்-19 பேர் கைது-50 பேரிடம் விசாரணை: போலீஸ் கமிஷனர் ஶ்ரீவத்சவா
டெல்லி: டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர்கள் பேரணியின் போது 394 போலீசார் படுகாயமடைந்துள்ளதாகவும் பலர் மிகவும் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி போலீஸ் கமிஷனர் ஶ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர்கள் பேரணி பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன. பல இடங்களில் போலீசாருடன் மோதல், தடியடிகள், கண்ணீர்புகை குண்டு வீச்சுகள் என டெல்லி மாநகரமே போர்க்களமானது.
விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் சதிநோக்கத்துடன் சிலர் ஊடுருவி இத்தகைய மோதல்களை அரங்கேற்றியதும் அம்பலமாகி உள்ளது. இந்த நிலையில் டெல்லி சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் கமிஷனர் ஶ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போலீஸ்- விவசாயிகள் பேச்சு
விவசாயிகள் டிராக்டர்கள் பேரணி நடத்த பகல் 12 மணி முதல் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்கான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு எழுத்துப்பூர்வமாகவும் அனுமதி தரப்பட்டது. விவசாயிகள் தரப்பிலும் 5,000 டிராக்டர்கள் மட்டும் பேரணியில் பங்கேற்கும்; ஆயுதங்கள் கொண்டுவரமாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டது.
வன்முறை பேச்சுகள்
ஆனால் ஜனவரி 25-ந் தேதி மாலையே விவசாயிகள் அளித்த வாக்குறுதிகளை மீற தொடங்கினர். தீவிரவாத சக்திகளை மேடையில் ஏற்றி தூண்டிவிடும் வகையில் அவர்கள் பேசினர். அவர்களது வன்முறை நோக்கம் மிக தெளிவாகவே இருந்தது. சத்னாம் சிங் பன்னுவின் பேச்சுகள் வன்முறையை தூண்டும் வகையில் இருந்தது. காசிப்பூர் பகுதியில் தர்ஷன் பால்சிங் ஆதரவாளர்கள் காலை 8.30 மணிக்கே தடையை மீறி பேரணியை தொடங்கினர்.
394 போலீசார் படுகாயம்
ஜனவரி 26-ந் தேதி நடத்தப்பட்ட விவசாயிகளின் டிராக்டர்கள் பேரணியில் மொத்தம் 394 போலீசார் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் மிகவும் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி போலீசாரால் இதுவரை 25-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
19 பேர் கைது- 50 பேரிடம் விசாரணை
சிசிடிவி காட்சிகள் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டு வருகிறோம். குற்றச்செயல்கள், வன்முறைகளில் ஈடுபட்ட யாரும் தப்பிவிட முடியாது. இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 50 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
|
வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை
டிராக்டர்கள் பேரணியை அமைதியாக நடத்தி முடிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்பினோம். விவசாய சங்க தலைவர்கள் பலரும் வாக்குறுதிகளை மீறி வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லி விவசாயிகள் பேரணியில் தேசிய கொடி அவமதிக்கப்பட்டது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும். டெல்லி போலீசாருக்கு விவசாய சங்கத் தலைவர்கள் துரோகம் செய்துவிட்டனர். காசிப்பூர் பகுதியில் ராகேஷ் திகாயத் ஆதரவாளர்கள் போலீசாரின் தடுப்புகளை உடைத்தனர். போலீசாருக்கு வேறுவழியே இல்லாமல்தான் அவர்களைத் தடுத்தனர். இவ்வாறு ஶ்ரீவத்சவா கூறினார்.