இந்த 'இரண்டு' காரணங்களால் தான் கொரோனா 3ஆம் அலை ஏற்படும்.. அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை
டெல்லி: புதிய உருமாறிய கொரோனா மற்றும் எளிதாக வைரசால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளவர்கள் (susceptible population) ஆகியவை காரணமாக நாட்டில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா 2ஆம் அலையே நாட்டில் இப்போது தான் மெல்லக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இந்தச் சூழலில் கொரோனா 3ஆம் அலை குறித்து வெளியாகியுள்ள தரவுகள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
இந்நிலையில் கொரோனா 3ஆம் அலை எப்போது எதனால், ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக விளக்கியுள்ளார்.
தமிழ்நாடு.. தனியார் மருத்துவமனைகளிலும் இனி இலவச கொரோனா தடுப்பூசி.. மா.சுப்பிரமணியன் தகவல்
தடுப்பூசி பணிகள்
சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், "தடுப்பூசி பணிகளுக்கு இப்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தீவிர கொரோனா பாதிப்பை ஏற்படுவதை அது தடுக்கிறது. அதேபோல சமூக தடுப்பாற்றல் எனப்படும் herd immunity உருவாகவும் தடுப்பூசிகள் மிகவும் முக்கியம். கொரோனா தடுப்பூசிகள் தீவிர பாதிப்பைத் தடுத்து உயிரிழப்புகளைக் கணிசமாகக் குறைக்கிறது.
சிறார்கள்
கொரோனா 3ஆம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால் இதை உறுதி செய்ய அறிவியல்பூர்வமாக எந்தவொரு தரவுகளும் இல்லை. சிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் போது, அவர்கள் எந்தவொரு அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. பெரும்பாலும் சிறார்களுக்கு லேசான கொரோனா பாதிப்பே ஏற்படுகின்றது.
2 காரணங்கள்
புதிதாகத் தோன்றும் உருமாறிய கொரோனா அல்லது வைரசால் எளிதாகப் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ள நோயாளிகள் ஆகியோர் காரணமாக கொரோனா 3ஆம் அலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது கொரோனாவை கட்டுப்படுத்த நாம் உண்டாகும் பல்வேறு நடவடிக்கைகளையும் பொருத்தும் அமையும். நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தத் தேவையான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத் துறை வழங்கியுள்ளது.
தேவையான நடவடிக்கை
மாநில அரசுகள் அளிக்கும் தரவுகளைப் பொறுத்து கொரோனா பாதிப்பு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் ஐசியு படுக்கைகள், தனிமைப்படுத்தப்படும் படுக்கைகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளும் வழிகாட்டுதல்களும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.
ஆக்சிஜன் உற்பத்தி
சுகாதாரம் என்பது மாநில பட்டியலில் வருகிறது. இருந்தாலும்கூட மாநில அரசுகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவியையும் மருந்து மற்றும் ஆக்சிஜன் கையிருப்பதை அதிகரிக்கத் தேவையான உதவிகளையும் மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அதேபோல ஸ்டீல் தொழிற்சாலைகளின் உதவியுடன் ஆக்சிஜன் உற்பத்தியும் அதிகப்படுத்தப்பட்டது.
புதிய வேக்சின்
கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல புதிய வேக்சின்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாசியில் செலுத்தும் வேக்சின் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல 2 முதல் 17 வயதுடைய சிறார்களுக்கான கோவாக்சின் சோதனையும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Recommended Video
சிறார்களுக்கான வேக்சின்
அதேபோல டிஎன்ஏ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட Zydus Cadila வேக்சின் சோதனையும் நடைபெற்று வருகிறது. சோதனை முடிவுகள் அடிப்படையில் இதற்கு அனுமதி அளிப்பது குறித்தும் தேவையான முடிவு எடுக்கப்படும். அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வேக்சின்களை நம் நாட்டுக் குழந்தைகள் மீது சோதனை நடத்த அனுமதி அளிக்கப்படுவதில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.