லடாக் லே சீன எல்லைப்பகுதியில்...4,000 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி!
டெல்லி: லடாக்கில் இந்தியா-சீனா எல்லைபகுதியில் லேவில் உள்ள சுமார் 4,000 ராணுவ வீரர்கள் தடுப்பூசிகள் போடும் பணி இன்று முதல் தொடங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
லடாக் எல்லை பகுதிகளில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதே இறுதித் திட்டமாகும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.
கடும் பதற்றம்
இந்தியாவில் இமயமலைப்பகுதியில் உள்ள லடாக்கில் லே நகர் உள்ளது. இந்தியா-சீனா எல்லைபகுதியில் லே அமைந்துள்ளது. லடாக் எல்லையில் இந்தியா-சீனா வீரர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கடுமையாக மோதிக் கொண்டனர். இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன ராணுவம் தரப்பிலும் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
படைகள் குவிப்பு
இந்த சம்பவத்ததுக்கு பிறகு லடாக் எல்லைபகுதிகளில் கடந்த சில மாதங்களாக பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா-சீனா ராணுவ படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. அங்கு நிலவும் பதற்றத்தை தணிக்க இரு தரப்பு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அங்கு நிலைமையை வீரர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
4,000 பேருக்கு தடுப்பூசி
இந்த நிலையில் நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. லடாக் லேவில் உள்ள சுமார் 4,000 ராணுவ வீரர்கள் கொரோனா தடுப்பூசியை பெறுவார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்திய-சீனா எல்லையில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட சுமார் 4,000 வீரர்களுக்கு தடுப்பூசிகள் போடும் பணி இன்று முதல் தொடங்கபப்டும் மருத்துவ குழு மற்றும் சுழற்சிக்கு திட்டமிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அனைவருக்கும் கிடைக்கும்
லடாக் எல்லை பகுதிகளில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதே இறுதித் திட்டமாகும். அது சரியான நேரத்தில் செய்யப்படும் .முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு கூட போதுமான தடுப்பூசிகள் இன்னும் இல்லை. தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கும் போது, லடாக்கில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.