பிரபல பெண் பத்திரிக்கையாளர் பர்கா தத்திடம் ஆன்லைனில் அட்டகாசம்.. 4 பேர் அதிரடி கைது
டெல்லி: பிரபல பெண் பத்திரிக்கையாளர் பர்கா தத்தை ஆன்லைனில் மோசமான வகைகளில், தொந்தரவு செய்த குற்றச்சாட்டின்பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் பணிபுரியும் பிரபல பெண் பத்திரிக்கையாளரான பர்கா தத், கடந்த பிப்ரவரி 21ம் தேதி, டெல்லி சைபர் பிரிவு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அதில், தனது தொலைபேசி எண்ணுக்கு மிரட்டும் வகையிலான போன் அழைப்புகள், மெசேஜ்கள், வாட்ஸ்அப் கால்கள் வருவதாகவும், மோசமான புகைப்படங்களை அடையாளம் தெரியாத நபர்கள் தனக்கு அனுப்பி வைப்பதாகவும் அந்த புகாரில் பர்கா தத் குறிப்பிட்டிருந்தார்.
DMK vs AIADMK: திமுக vs அதிமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள்
தவறான சித்தரிப்பு
எனது தொலைபேசி எண், சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு, என்னை தவறான பெண்ணாக சித்தரித்துள்ளனர். அதன் மூலமாகத்தான், எனக்கு பல்வேறு தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. நிர்வாண புகைப்படங்கள், மோசமான வார்த்தைகளுடன் கூடிய டெக்ஸ்ட் மெசேஜ் ஆகியவையும் வந்தன என்று பர்கா தத் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
மகளிர் ஆணையம் அறிவுறுத்தல்
இதையடுத்து, மிரட்டல், குற்ற நோக்கம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை மந்த கதியில் இருந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இந்த பிரச்சினையில் தலையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறையை கேட்டுக் கொண்டது. இதனிடையே, பர்க்கா தத் புகாரின்பேரில், நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜிவ் ஷர்மா (23), ஹேமராஜ் குமார் (31), ஆதித்ய குமார் (34) ஆகிய டெல்லியை சேர்ந்த வாலிபர்களும், சபீர் குர்பான் பின்ஜாரி (45) என்ற சூரத்தை சேர்ந்த நபரும்தான் கைது செய்யப்பட்டவர்களாகும்.
கைதானவர்கள் பின்புலம்
இதில் ராஜிவ் ஷர்மா, தொலைதூர வழிக் கல்வியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருப்பதும், ஹேமராஜ் ஹோட்டலில் செஃப்பாக இருப்பதும், ஆதித்யா தனியார் நிறுவனத்தில், விற்பனை பிரதிநியாக பணியாற்றுவதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் மூவரும் மோசமான வார்த்தைகளுடன் கூடிய மெசேஜ்களை அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நிர்வாண புகைப்படங்களை அனுப்பியவர் சபீர் குர்பான் பின்ஜாரி என தெரியவந்துள்ளது. இவர் இறைச்சி கடையில் வேலை பார்ப்பவர். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
எண் கொடுத்தது யார்
பர்கா தத்தின் தொலைபேசி எண் சோஷியல் மீடியாவில் கிடைத்ததாகவும், ஆனால் அவர் பத்திரிக்கையாளர் என்று தெரியாது என்றும், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கான தொலைபேசி எண் என இவரது எண்ணையும் யாரோ குறிப்பிட்டு ஷேர் செய்திருந்ததாகவும், விசாரணையில் இந்த நால்வரும் தெரிவித்துள்ளனர். எனவே, பர்கா தத் தொலைபேசி எண்ணை ஷேர் செய்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
|
இன்னும் உண்டு
இதனிடையே பர்கா தத் வெளியிட்ட ட்வீட்டில், கைது நடவடிக்கைக்கு போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேநேரம், இன்னும் இதேபோன்ற 10 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.