சிபிஐ கஸ்டடியில் ப. சிதம்பரம்.. தினமும் குடும்பத்தாரை சந்திக்கலாம்.. ஆனால் ஒரு நிபந்தனை!
Recommended Video
டெல்லி: ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ஆகஸ்ட் 26ம் தேதிவரை சிபிஐ கஸ்டடியில் ப.சிதம்பரத்தை வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
நேற்று இரவு கைது செய்யப்பட்ட சிதம்பரம், சிபிஐ அதிகாரிகளால் இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஏற்கனவே, இந்த வழக்கு விசாரணை அனைத்திற்கும் சிதம்பரம் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்து வந்ததால், அவருக்கு சிபிஐ கோரியபடி காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கூடாது என்று சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் கபில்சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் வாதிட்டனர்.
முன்னதாக சிபிஐ தரப்பில் வாதிட்ட அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தா, சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பின்னர் வழங்கிய தீர்ப்பில், சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். மேலும் தினமும் சிதம்பரத்தின் குடும்பத்தினர் அவரை சந்தித்து பேசிக் கொள்ளவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரம், அரைமணிநேரம் மட்டும் சந்தித்துக் கொள்ளலாம் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை அடுத்து வரும் 26ம் தேதிவரை சிதம்பரம் சிபிஐ கஸ்டடியில் இருப்பார். அதன் பிறகு தேவைப்பட்டால் காவலை நீட்டிக்க சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கலாம், அல்லது விசாரணை முடிந்ததாக, அறிவிக்கவும் செய்யலாம்.
இன்று சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரது மனைவி, நளினி சிதம்பரம், மற்றும் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரும், நீதிமன்றம் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.