4 மாத குழந்தையுமா போராட்டத்திற்கு செல்கிறது? உச்சநீதிமன்றம் கோபம்
டெல்லி: குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் டெல்லியின் ஷாஹீன் பாக் என்ற இடத்தில் நான்கு மாத கைக்குழந்தை மரணமடைந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றம், மத்திய மற்றும் டெல்லி மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
"நான்கு மாத குழந்தை போராட்டத்திற்கு செல்ல முடியுமா?" என்று ஷாஹீன் பாக் நகரில் ஆர்ப்பாட்டத்தில் அமர்ந்திருக்கும் குழந்தைகளின் தாய்மார்களுக்காக ஆஜரான, வழக்கறிஞர்களிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு, எதிராக ஷாஹின் பாக் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே, ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், நான்கு மாதமான முகமது ஜஹான் என்ற சிறுவனை, ஷாஹீன் பாக் நகரில் உள்ள போராட்ட ஸ்தலத்திற்கு அவரது பெற்றோர் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அழைத்துச் சென்றனர். ஆனால், கடுமையான குளிர் மற்றும் மக்கள் நெரிசலால், அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த நிலையில்தான், 12 வயதாகும் ஜென் குன்ரதன் சதாவர்டே என்ற வீரதீர விருது பெற்ற சிறுமி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய, கடிதத்தில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க கோரியிருந்தார். இவர் மும்பை நகரில் ஒரு குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டபோது, வீரமாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றிய சிறுமியாகும். அந்த சிறுமியின் கடிதத்தை ஏற்று, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் இந்த சம்பவத்தை விசாரிக்க ஆரம்பித்துள்ளது.
சிஏஏவை கண்டித்து பேரணி.. ஜாமியா பல்கலை மாணவர்கள்- போலீஸார் இடையே தள்ளுமுள்ளு.. டெல்லியில் பரபரப்பு
ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், வாதிடுகையில், கிரெடா தன்பெர்க் (ஸ்வீடன்) கூட, போராட ஆரம்பித்தபோது சிறுமிதான். குறிப்பிட்ட ஏரியாவிலிருந்து பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள், பாகிஸ்தானி என அழைக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.போப்டே, சம்மந்தம் இல்லாத வாதங்களை முன் வைக்காதீர்கள். அப்படியான வாதங்களை நாங்கள் நிறுத்த வேண்டியுள்ளது. இது நீதிமன்றம். தாய்மை மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்று தெரிவித்தார்.